08/15/2023
எந்த மனிதரின் தோள்களில் இந்த பாரம் முழுவதும் ஏறப்போகிறதோ அந்த மனிதர் இப்போது பேச எழுந்தார். லாகூரிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததற்குப் பின்னால் ஜவஹர்லால் நேருவுக்கு சுதந்திரதின உரையைத் தயாரிக்க நேரமும் இல்லை; ஈடுபாடும் இல்லை. அவரது வார்த்தைகள் தன்னெழுச்சியாகவும் இதயத்தைத் தொடுவதாகவும் இருந்தன.
"பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் ஒரு தீர்மானத்துடன் நம்மை ஈடுபடுத்திக் கொண்டோம். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் நேரம் இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அல்லது பெருமளவினதாக இல்லையென்றாலும் மிகவும் உண்மையானதாக அது இருக்கும். உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு நேரத்தில் இந்தியா வாழ்வுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் விழித்துக் கொள்கிறது"என்று அவர் அறிவித்தார்.
அவரது உதடுகளிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக வார்த்தைகள் வந்து விழுந்தன. ஆனால் மிக முக்கியமான அந்தத் தருணத்தில் ஜவஹர்லால் நேருவின் உரை சாதனை நிகழ்த்தக் கூடியதாக அமையவில்லை. "நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்பது எனக்கே தெரியாது. என் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து கொண்டிருந்தனவே தவிர எனது மனம் முழுவதும் பற்றி எரியும் லாகூரின் பயங்கரக் காட்சியிலேயே லயித்திருந்தது" என்று பின்னாளில் அவரது சகோதரியிடம் நேரு கூறினார்.
நேரு பேச்சைத் தொடர்ந்தார், "ஒரு சந்தர்ப்பம் வருகிறது. அந்த சந்தர்ப்பம் வரலாற்றில் மிகவும் அரிதானது. நாம் பழையதிலிருந்து புதியதில் அடியெடுத்து வைக்கிறோம்; ஒரு சகாப்தம் முடிவடைகிறது. நெடுங்காலம் அடக்கி வைக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இப்போது பேசப் போகிறது. வரலாற்றின் விடியலில் இந்தியா தனது முடிவில்லா ஆய்வைத் தொடங்கியுள்ளது. அதன் பாதையறியாப் பல நூற்றாண்டுகள் முயற்சிகளாலும் வெற்றிகளாலும் தோல்விகளாலும் நிறைந்தவை. நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் இடையே தேடலை ஒருபோதும் விட்டுவிடவில்லை; அல்லது தனக்குப் பலமளித்த சிந்தனைகளை மறந்துவிடவில்லை. துரதிருஷ்டமான காலத்தை இன்று நாம் முடிக்கிறோம். இந்தியா சுயமாக தன்னைத் தானே கண்டறிந்து கொள்கிறது".
"அற்பமான அழிவுதரும் தரும் விமர்சனங்களுக்கு இது நேரமல்ல. மனக்கோணலுக்கும் மற்றவர்களைக் குற்றம் சொல்வதற்கும் இது நேரமல்ல. சுதந்திர இந்தியாவில் அதன் அனைத்து மக்களும் வாழ்வதற்குரிய பெருந்தன்மையான இல்லத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது" என்று உரையை முடித்தார்.
நள்ளிரவின் மணி ஒலிக்கும் போது, அனைவரும் எழுந்து இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் சேவை செய்யத் தாங்களாகவே உறுதி மொழியேற்குமாறு நேரு கோரினார். வெளியே அந்த நள்ளிரவின் வானத்தில் இடி முழக்கங்களின் ஒலியலைகள் பரவின. அந்த மண்டபத்தைச் சுற்றிலும் நெருக்கியடித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான சாமான்ய இந்தியர்கள் மேல் பருவ மழை பொழிந்தது. மிதிவண்டிகளைப் பற்றிக்கொண்டு, வெள்ளைநிறக் குல்லாக்களுடனும், உள்நாட்டுப் பருத்தியால் தயாரித்த தொளதொளப்பான கழுத்தில்லாத உடையுடனும், வெள்ளைச் சட்டைகளுடனும், புடவைகளுடனும், வியாபார ஆடைகளுடனும், கொட்டும் மழையிலும் சிதறாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். வரவிருக்கும் வளமிக்க சந்தர்ப்பத்துக்காக ஏங்கி அவர்கள் அசைவற்று நின்றிருந்தனர்.
~ நள்ளிரவில் சுதந்திரம் நூலிலிருந்து...