28/05/2022
வைகாசி மாதம்
அக்னி நட்சத்திரம்
சுட்டெரிக்கும் சூரியன்
ஆனாலும்
குளிர்ந்த காற்றோடு
மண்ணை ஈரமாக்கி
மனதை இதமாக்கியது
கோடைமழை.
மே மாதம் 20ம் நாள், வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணி, ‘கோடை மழை’ என்ற கருப்பொருளோடு துவங்கியது, எமது தெம்பனீஸ் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் 82வது மன்றக் கூட்டம்.
‘தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’
என்ற அறத்துப்பால் இல்லறவியல் குறளோடு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார், தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவரும், அன்றைய அரங்கக் காவலருமான பேச்சாளர் பிரபாகரன் அவர்கள்.
அடுத்ததாக, வந்திருந்த அனைத்து பேச்சாளர்கள், விருந்தினர்கள், பிற மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று இணைய மேடை யை அன்றைய நெறியாளரான பேச்சாளர் வேல்முருகன் அவர்களிடம் ஒப்படைத்தார் தலைவர் மணிகண்டன் அவர்கள்.
நெறியாளர், அன்றைய நிகழ்ச்சி நிரலையும் விதிமுறைகளையும் அறிவித்து மிக நேர்த்தியாக நிகழ்ச்சி யை வழிநடத்திச் சென்றார்.
இன்றைய சொல் : திண்ணம்
முதல் அங்கம்: தயாரிக்கப்பட்ட உரை
முதலாவதாகத் திட்டம் படைத்தவர் கம்பன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் ராஜாமோகன் அவர்கள். ‘வழிகாட்டுதல்’ என்ற தலைப்பில் கேள்விக்கணைகளோடு ஆரம்பித்து, தன்னுடைய சிறிய வயது லட்சியத்தை ஆர்வத்தோடு விளக்கி, பேச்சாளர் மன்றத்திற்கு தான் வந்த கதையையும், தனக்கு வழிகாட்டியாக விளங்கியவர்களையும் அழகான காட்சி வில்லைகளோடு தெளிவுற விளக்கினார்.
இரண்டாவதாகத் திட்டம் படைத்தவர் பாரதியார் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் சுரேஷ் அவர்கள். ‘முழுநேர வழிகாட்டியாக ஆசை’ என்ற தலைப்பில், ‘அறிவே மனிதனை உருவாக்கும் கருவி’ என்ற அப்துல் கலாமின் பொன்மொழி கொண்டு தொடங்கி, அவரது வழிகாட்டுதலில் தான் விரிவுரையாளராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றத்தில் தனக்கிருந்த பங்கு, அந்தப் பணியில் தான் சந்தித்த சவால்கள் அனைத்தையும் இயல்பான தமிழில் பகிர்ந்துகொண்டார்.
மூன்றாவதாகத் திட்டம் படைத்தவர், பேச்சாளர் அகிலா மணிகண்டன் அவர்கள். ‘வீட்டை ஒழிப்போம்’ என்ற தலைப்பில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதின் சிறப்புகளையும், தேவையில்லாத பொருட்களை அகற்றுவதனால் வீட்டிலும் உடலிலும் மனதிலும் ஏற்படும் நேர்மறையான மாற்றங்களையும் அழகாக விளக்கினார். மேலும், இதனை எளிமையாக தினந்தோறும் எவ்வாறு செய்வது என்பதை தன் வலையொளியில் பதிவேற்றிய தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
இறுதியாகத் திட்டம் படைத்தவர் பேச்சாளர் ராதிகா அவர்கள். ‘கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் சேட்டை’ என்ற தலைப்பில், சில மாதங்களுக்கு முன் எம் மன்றத்தின் சிறப்பு அங்கமாக நடந்தேறிய கலந்துரையாடல் நிகழ்வில் தான் ஏற்பாட்டாளராக இருந்து செயல்பட்ட அனுபவங்களை நகைச்சுவையோடு விளக்கினார்.
நேரக்கண்காணிப்பாளரின் அறிக்கையோடு சிறந்த தயாரிக்கப்பட்ட உரைக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
அடுத்த அங்கம்: சிறப்பு அங்கம்.
‘ முத்தமிழ்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அங்கம், அரங்கப் பேச்சு அங்கம் இரண்டையும் கலந்த ஒரு அங்கமாக வழிநடத்திச் சென்றவர் பேச்சாளர் மைக்கேல் ஜோசப் அவர்கள். இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் விளக்கிப் பேசினார்கள் முத்தான மூன்று பேச்சாளர்கள்.
இயற்றமிழ் குறித்து‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ என தொடங்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றை இயல்பான தமிழில் விளக்கிப் பேசினார் பேச்சாளர் தியாகராஜன் அவர்கள்.
‘இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை’ என இசைத்தமிழ் குறித்து பாமாலையோடு ஆரம்பித்து, சங்ககால நூல்கள் கூறும் இசைக்கருவிகள் பற்றிய தெளிவுரையையும், பாமர மக்களும் புரிந்து கொள்ள ஏதுவாக மாறிய இசைத் தமிழையும், தெருக்கூத்தின் முக்கியத்துவத்தையும், கிராமிய பாடலில் இருந்த நவரசத்தையும் ஆங்காங்கே இனிய குரலில் பாடி, மிக நேர்த்தியாகவும் நெகிழ்வாகவும் பேசினார் பேச்சாளர் உமா மகேஸ்வரி அவர்கள்.
நாடகத்தமிழ் குறித்து, பெருஞ்சலங்கை ஆட்ட வகையில், காலில் வெண்கலச் சலங்கை கட்டி, கற்காலம் தொடங்கி, அகநானூறு நூல்களில் உள்ள பாடல்கள் வாயிலாக, மொடாமேளம், பறை என பலதரப்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தி தெளிவான விளக்க உரை அளித்தார் பேச்சாளர் நித்தியானந்தம் அவர்கள். பேச்சுக்காக மட்டுமல்லாமல், பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி வலையொளி வாயிலாக தான் கற்றுக்கொண்ட பெருஞ்சலங்கை ஆட்டத்தை, நான்கு அடவுகள் கொண்டு, தன் நண்பர் இசைக்கருவி வாசிக்க ஆடிக் காட்டியும், அது மனதிற்கும் உடலுக்கும் எவ்வாறு புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதையும் தெரிவித்தார்.
மூன்றாவது அங்கம்: அரங்கப் பேச்சு அங்கம்
திடீர் தலைப்புகள் கொடுத்து, ஒரே தலைப்பில் வெட்டியும் ஒட்டியும் பேசச் செய்து, வேறுபட்ட முறையில் அரங்கப் பேச்சு அங்கத்தை வழிநடத்திச் சென்றவர் பேச்சாளர் சுதா அவர்கள்.
நேரக் கண்காணிப்பாளரின் அறிக்கைக்குப் பிறகு சிறந்த அரங்க பேச்சுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
நான்காவதுஅங்கம்: மதிப்பீட்டு அங்கம்
பேச்சாளர் ராஜா மோகன் அவர்களது திட்டத்தை கம்பன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் சுகந்தினி அவர்களும்,பேச்சாளர் சுரேஷ் அவர்களின் திட்டத்தை சேரன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் உமாசங்கர் அவர்களும், பேச்சாளர் அகிலா மணிகண்டன் அவர்களின் திட்டத்தை பேச்சாளர் கம்பன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் அன்னபூரணி அவர்களும், பேச்சாளர் ராதிகா அவர்களின் திட்டத்தை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பேச்சாளர் எழிலி கருணாகரன் அவர்களும் சிறப்புற மதிப்பீடு செய்தார்கள்.
ஐந்தாவது அங்கம் : பொது மதிப்பீடு அங்கம்
உரிச்சொல் கணக்கீட்டை பேச்சாளர் ராஜன் அவர்களும், மொழி மதிப்பீட்டை பெக்கியோ மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் லட்சுமி சொக்கலிங்கம் அவர்களும் சிறப்புற செய்தார்கள்.
இம்மாதக் கூட்டத்திற்கான பதாகையை வடிவமைத்த இந்தியாவைச் சேர்ந்த மாணவி மதுஸ்ரீ அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக நேரக்கண்காணிப்பாளராகவும், வாக்குச்சீட்டு கணக்கெடுப்பாளராகவும் செயல்பட்ட தலைவர் மணிகண்டன் அவர்கள், நியமன உறுப்பினர்களாக பங்களித்த, வெளிமன்றங்களில் இருந்து வந்து கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களையும், வெற்றியாளர்களுக்குப் பரிசுப் புத்தகங்களையும் வழங்கினார். குழுப்புகைப்படத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவை நாடியது.
வெற்றியாளர்கள் விவரம்:
தயாரிக்கப்பட்ட உரை-------- பேச்சாளர் ராதிகா ராமலிங்கம்
பரிசுப் புத்தகம்----------------- இனிய நீதி நூல்கள் (கவிஞர் பத்மதேவன்)
அரங்கப் பேச்சு அங்கம்------- பேச்சாளர் சுகந்தினி
பரிசுப் புத்தகம்----------------- கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்
(தமிழ் பிரியன்)
மதிப்பீட்டு அங்கம்------------- பேச்சாளர் எழிலி கருணாகரன்
பரிசுப் புத்தகம் ---------------------இனிக்கும் இளமை (இறையன்பு)
எமது அடுத்த மன்றக் கூட்டம் ஜூன் 5, ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி!
வாழ்க தமிழ்!! வளர்க நற்றமிழர்!!