07/10/2025
மரணித்த நல்லடியார்களின் மூலம் வஸீலா கேட்பது (ஊடாக துவா கேட்பது) கூடுமா ? கூடாதா ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
-
மரணித்த நல்லடியார்களிடம் நேரடியாக துஆ கேட்கும் இஸ்திகாஸாவும் (استغاثة بغير الله ) இவர்களின் பொருட்டால் அல்லது இதன் பொருட்டால் என்று துவாவில் கேட்கப்படும் வஸீலாவும் வேறு வேறு என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இதைப் புரிந்து கொள்ள சிரமப்படும் பரேல்விய நண்பர்களுக்கு சற்று திறந்த மனதுடன் அடியேன் கூறும் அறிவுரை,
சத்தியத்தை விளங்க வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் ஆழமாக கொள்ளுங்கள், எதிர் கருத்தில் சத்தியம் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளுங்கள்,
நாம் விளங்கிய கொள்கை நாம் படித்த கொள்கை நமது ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த கொள்கை எமது மதரஸா எனக்கு படித்துக் கொடுத்த கொள்கை என்று இல்லாமல் சத்தியத்தை பின்பற்ற வேண்டும் என்று எண்ணுபவர்கள் மட்டும் எனது தொடர்களை படிக்கவும் மற்றவர்கள் தாராளமாக தங்களின் பணிகளை மேற்கொள்ளுங்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் சத்தியத்தை மரணம் வரை விளங்கி பின்பற்றும் பாக்கியத்தை வழங்கி விடுவானாக !!
வஸீலா & தவஸ்ஸுல் - மரணித்த நல் அடியார்களின் ஊடாக துஆ கேட்பது பற்றி மார்க்க அறிஞர்கள் மூன்று கருத்துகளை முன் வைக்கின்றனர்.
💥முதலாவது:
மரணித்த நல்லடியார்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஊடாக யா அல்லாஹ்!!
இந்த நல்லடியாரின் ஊடாக இந்த தேவையை நிறைவேற்றிக் கொடு என்று கேட்பது போல் கேட்பது அறவே கூடாது.
அது நபி அவர்களாக இருந்தாலும் சரியே,
இந்தக் கருத்தை முன்வைப்பவர்கள் இமாம் அபூ ஹனிபாஃ மற்றும் அவர்களின் மாணவர்கள், இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் இந்த கருத்தைப் பற்றி தனது புத்தகமான
قاعدة جليلة في التوسل والوسيلة كتاب من تأليف ابن تيمية يتحدث فيه عن التوسل وأحكامه من منظور أهل السنة والجماعة.
"காயிதா ஜலீலா பீஃத் தவஸ்ஸுலி,வல் வஸீலா ",
இந்த புத்தகத்தில் இந்தக் கருத்தை சிறந்த கருத்தாகவும் ஏகத்துவத்திற்கு நெருக்கமான கருத்தாகவும் , இறைத்தூதர் ஸல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதில் மார்க்கம் காட்டித் தந்த வரைமுறைகளுக்குள் இருக்கிறது என்று கூறுகிறார்கள் ,
நபியவர்கள் காலத்திலும் அவர்கள் மரணத்துக்கு பின்பும் அவர்களின் ஆதாரப்பூர்வமான எந்த நபி மொழியும் நபியவர்களின் ஊடாக துவா கேட்டதற்கு சான்றுகள் இல்லை இதற்கு பல மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை ஷைகுல் இஸ்லாம் அவர்கள் தங்கள் புத்தகத்தில் ஒன்று திரட்டி இருக்கிறார்கள்.
கூறும்பொழுது நபி அவர்களின் ஊடாக நமது அமல்களையும் இபாதத்துகளையும் மார்க்க விடயங்களையும் அமைத்துக் கொள்வது கூடுமா கூடாதா என்ற கேள்விக்கு அப்பால் அவர்களை முழுக்க முழுக்க பின்பற்றுவதும் அவர்கள் காட்டித் தந்த வழியில் நாம் பயணிப்பதும் நமக்கு அவசியம் இதுதான் இஸ்லாம் நமக்கு காட்டித் தந்த வழிமுறை இந்த முறையான வஸீலா ஜாயிஸ் (கூடும்) என்பது மட்டுமல்ல வாஜிபாகும்.
ஆனால் அவர்களின் வாழ்வில் வசிலா கூடும் உதாரணமாக நபியவர்களே எங்களுக்காக துஆ செய்யுங்கள் , எவ்வாறு நாம் நல்லடியார்கள் என்று கருதும் உயிருடன் இருக்கும் பெரியார்களிடம் எனக்காக துஆ செய்யுங்கள் என்று கூறுகிறோம் இது கூடும் ,அவர்களின் மரணத்திற்குப் பின்பு அவர்களின் ஊடாக துஆ கேட்பது கூடாது அது இணைவைத்தலை கற்பித்து விடும்.
இந்த கருத்தை அல்லாமா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
💥இரண்டாவது:
மரணித்த நல்லடியார்கள் யாரின் ஊடாகவும் வசிலா கேட்கக் கூடாது ஆனால் இறைத்தூதர் ﷺ அவர்கள் ஊடாக வஸீலா கேட்கலாம் இந்த கருத்தை இமாம்
இஸ் பின் அப்துஸ் ஸலாம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
💥மூன்றாவது:
நபி அவர்களை வைத்து துஆ கேட்பது மரணத்திற்கு பின்பு கூடும் என்ற கருத்து இருப்பதினால் ஏனைய இறை நேசர்கள் நல்லடியார்கள் அவர்களையும் துஆவில் வஸீலவாக தேடலாம்.
ஆனால் அல்லாஹ் ஒருவனே தீமையை தடுப்பதற்கு நன்மை வழங்குவதற்கும் சக்தி பெற்றவன் என்ற ஈமானுடன் நல்லடியார்களின் பொருட்டால் வசீலா கேட்கலாம் இந்தக் கருத்தை இமாம் ஷவ்கானி ரஹிமஹுல்லாஹ் தங்களது புத்தகத்தில் துஹ்பஃதுத் தாகிரீன் -
- تحفة الذاكرين
ல் கூறுகிறார்கள்.
இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இந்த கருத்தை கூறுகிறார்கள் என்று இமாம் தகியுத்தீன் அஸ்ஸுபுகி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் .
திர்மதியின் விளக்க உரையான துஹ்பஃதுல் அஹ்வதியில் تحفة الأحوذي
அதன் ஆசிரியரான அஷ்ஷைக் முபாரக்பூரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த கருத்து வேறுபாடுகளை கூறுகிறார்கள்.
ஆக நபியவர்களின் மரணத்துக்கு பின்பு அவர்களின் ஊடாக துவா கேட்கலாம் என்று முன்வைக்கப்படும் மாற்றுக் கருத்தினரின் நபிமொழிகள் அனைத்தும் ஆதாரங்கள் அற்றதாகவும் இட்டுக்கட்டப்பட்ட நபிமொழிகளாக இருக்கின்றன.
அல்லாஹு அஃலம்.
உஸ்தாத் S.முஹம்மது இஸ்மாயீல் நத்வி