24/08/2025
✨குடும்பத்தின் மூத்த உறுப்பினரான அல் ஹாஜ் S T அகமது மீரா சாகிபு அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு✨
கடந்த 2025.08.21 ம் திகதி குடும்பத்தின் மூத்த உறுப்பினரான -அல் ஹாஜ் S T அகமது மீரா சாகிபு- அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு குடும்ப உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்காக அன்னாரின் இல்லத்திற்கு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் சென்று அவர்களை கௌரவிக்கும் முகமாக, மூத்த குடும்ப உறுப்பினரான மக்கீன் அவர்களினால் பொன்னாடை போற்றப்பட்டு, எமது குடும்ப தலைவர் ரசூல் அவர்களினால் பரிசும் வழங்கப்பட்டது.
மேலும் தலைவரினால் அன்னாரின் நற்குணங்கள் பற்றியும் நினைவு கூறப்பட்டது.
✅அல் ஹாஜ் S T அகமது மீரா சாகிபு அவர்களை பற்றிய சிறு தொகுப்பு
✨அல் ஹாஜ் S T அகமது மீரா சாகிபு (சின்னராசா பலசரக்குக் கடை உரிமையாளர்)✨
இவர் சம்மாந்துறையில் 1949 ஆம் ஆண்டு சீனித் தம்பி செயினம்பு தம்பதியினருக்கு நான்காவது பிள்ளையாகப் பிறந்தார்.
இவர் தனது ஏழாவது வயதில் தாயை இழந்தார்.
1971 ஆம் ஆண்டு தனது தந்தையை இழந்தார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பின்னர், தனது பெரியம்மாவாகிய (சிவத்தம்மா ) ஆசியா உம்மா என்பவரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
தனது கல்வியை தரம் மூன்று வரை கற்று வறுமையின் காரணமாக கல்வியைத் தொடர முடியாதவரானார்.
தனது இளைய சகோதரியின் கணவருக்கு உதவியாக வியாபாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தனியாக வீட்டில் பெட்டிக் கடை யொன்றை ஆரம்பித்தார்.
படிப்படியாக தனது முயற்சியால் பல சரக்கு கடை உரிமையாளராக பரிணமித்தார்.
இவருடைய வியாபார காலங்களில் சிறந்த நல்லொழுக்கம் உள்ளவராகவும், நேர்மையாளராகவும் காணப்பட்டார்.
தான் கொண்ட தொழிலைப் புனிதமாகக் கருதினார்.
அல்ஹம்துலில்லாஹ் தனது வளர்ப்புத் தாயின் அரவணைப்பும், தனது மூத்த சகோதரியின் மகனான மர்ஹூம் ஜஹுபர் அவர்களின் பக்க பலமும் அவர்களது நேர்மையான ஒத்துழைப்பும் இவரது முயற்சியின் உயற்சிக்குப் பலமாக அமைந்தது.
1978 ல் அவ்வா உம்மா என்பவரை திருமணம் செய்து தனது தாய் வீட்டிலேயே குடித்தனம் மேற்கொண்டார்.
இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் வாரிசுகளாக அவதரித்தனர்.
அனைவரும் திருமணம் முடித்து நல்ல நிலையில் உள்ளனர்.
தனது வியாபாரத்துக்கு பக்கபலமாக இருந்த தனது சகோதரியின் மகனான மர்ஹூம் ஜாஃபர் அவர்களுக்கு முதலீடு ஒன்றைச் செய்து வியாபாரத்தில் முன்னேற வழி சமைத்துக் கொடுத்தார். அன்னவரும் வியாபாரத்தில் உயர்வு நிலையை அடைந்தார்.
அன்னார், தனது சகோதரிகளை மிகவும் அன்பாகவும் பண்பாகவும் நேசித்தார். இரு சகோதரிகளின் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் அவரால் முடிந்த பெரும் உதவிகளை சிறப்பாக செய்து நிறைவேற்றினார்.
வறுமைக் கோட்டின் கீழ் இருந்த தனது சகோதரிகளை பிறரிடம் கையேந்த விடாது தினமும் கவனித்து வந்தார்.
தனது சகோதரியின் பிள்ளைகள் மீது இரக்கமும் பாசமும் காட்டினார். இவர்களது கல்வியில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார். அல்ஹம்துலில்லாஹ் அவர்களும் கல்வியில் நல்ல நிலையை அடைந்தனர்.
அன்னார், சிறு வயதிலிருந்து கலை ஆர்வம் நிறைந்தவராக காணப்பட்டார். இவரது கடை கணக்கு புத்தகங்களிலும், சுவர்களிலும் இவரது ஆக்கத் திறன்களைக் காணக் கூடியதாக இருந்தது.
இவரது உந்துதல்களினால் சிறு வயதிலேயே கவரப்பட்ட சகோதரியின் மகனான றசூல் அவர்கள் பிற்காலத்தில் சிறந்த கலைஞராகவும் அத்துறை சார்ந்த கல்விமானாகவும் திகழ்ந்து ஓய்வு நிலையை அடைந்துள்ளார்.
அதன் பின்னரும், அவர்களது வாரிசுகள் அத்துறையில் விற்பனர்களாகி பட்டப் படிப்புகளை மேற்கொண்டு ஆசிரியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், தொழில்நுட்ப உத்தியோதர்களாகவும் , வேறு தொழில்துறை சார்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
பின்னர் தனது அன்பு மனைவியோடு மக்கா சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றினார். தனது வாழ்நாளில் இருமுறை புனித கவ்பாவை தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார்.
ஒருமுறை தான் வியாபாரத்துக்காக கொள்வனவு செய்து வந்த பொருள் குவியலுள் மிகவும் பெறுமதியான தங்க மோதிரம் ஒன்றை கண்டெடுத்தார். அதைக் கண்டெடுத்ததும் பொருட்களைக் கொள்வனவு செய்த வெளியூர் மொத்த வியாபாரியிடம் சென்று விசாரித்து அவருடையது என்பதை அறிந்து அவரிடம் ஒப்படைத்தார்.
இதனால், அனைத்து வியாபாரிகளும் இவரது நேர்மையைக் கண்டு இவர் மீது அன்பு நேசமும் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.
இவர் செல்லப்பிராணிகள் மீது இரக்கம் கொண்டவராகவும் அவைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்ட கூடியவராகவும் காணப்பட்டார்.
தற்போது தனது 77 வது வயதை தாண்டிய நிலையில் வியாபாரத்தை தொடர முடியாது சுகவீனமுற்று உடல் பலவீனம் காரணமாக ஓய்வுடன் அல்ஹம்துலில்லாஹ் வாழ்ந்து வருகின்றார்.
அன்னார், நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இம்மையிலும் மறுமையிலும் நல் அருள் பெற்றுவாழ குடும்பத்தார் அனைவரும் பிராத்திக்கின்றோம்🤲🏻.
ஆமீன்.