11/12/2022
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட (MMDA) வரலாறு:
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. அது நாடாளுமன்றத்தினால் நியதிச்சட்டமாக (Statute) ஆக்கப்படுவதற்கு முன்னரும், நாடாளுமன்றத்தினால் 1951 ம் ஆண்டில் 13 ம் இலக்க நியதிச்சட்டமாக ஆக்கப்பட்டதன் பின்னரும் இச்சட்டம் பல திருத்தங்களைக் கொண்டுள்ளதுடேன் பல்வேறு குழுக்களால் ஆய்வுக்குட்படுத்தப் பட்டு அதை மேலும் திருத்தி இந்நாட்டு முஸ்லிம் சமுகத்திற்கு ஏற்ற வகைள் அமுல் படுத்துவதற்கு பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கை அரசர்களால் ஆளப்பட்டுவந்த காலத்தில் முதலாம் நூற்றாண்டிலேயே அரேபியர்கள் இலங்கையருடன் வியாபாரத் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்பதற்கும், எட்டாம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இலங்கையில் குடியமர்ந்தார்கள் என்பதற்கும், அவர்களின் விவாகம் மற்றும் விவாகரத்து போன்ற விடயங்களில் முஸ்லிம் சட்டமே பிரயோகிக்கப்பட்டது என்பதற்கும், 15 ம் நூற்றாண்டில் கொழும்பில் முஸ்லிம்களுக்காக ஒரு விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருந்தது என்பதற்கும் போதிய சான்றுகள் உள்ளன. போத்துக்கேயர் (Portugues) உள்நாட்டில் நடைமுறையிலிருந்த தனியார் சட்டங்களில் கைவைக்க விரும்பவில்லை. இதனால் முஸ்லிம் சட்டம் அவர்களால் பாதிப்புக்கு உட்படவில்லை. ஒல்லாந்தர் (Dutch) 1770 ம் ஆண்டில் பட்டாவியாவிலிருந்து (தற்கால ஜெகார்த்தா) கொண்டுவரப்பட்டது. பின்னர் ஆளுனர் அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் (Alexander Johnston) பட்டேவியக் கோவையை 1806 ம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இக்கோவை இருபது முஸ்லிம் பிரதானிகளால் அங்கீகரிக்கப்பட்டது. இது 1806 ம் ஆண்டின் முஹமதியக் கோவை (Mohamedan Code of 1806) என அறியப்படுகின்றது. 1852 ம் ஆண்டின் 5 ம் இலக்க Introduction of Laws of England Ordinance சட்டத்தின் மூலம் 1806 ம் ஆண்டின் முஹமதியக் கோவை நாடுமுழுவதற்கும் விஸ்தரிக்கப்பட்டது.
அப்போதைய காலகட்டத்தில் முஸ்லிம் பிரதானிகலாலேயே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. எனினும் இதில் ஏற்பட்ட நியாயமற்ற தன்மைகள் காரணமாக 1925 ம் ஆண்டில் The King Vs. Miskeen Umma (1925) 26 NLR 330 என்ற வழக்கில் உயர் நீதிமன்றம் முஸ்லிம்களுக்கிடையில் விவாகரத்து வழங்கக்கூடிய நியாயாதிக்கம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாத்திரமே உண்டு என்றும் வழக்காறுகளின்படி முஸ்லிம் பிரதானிகளால் வழங்கப்படும் விவாகரத்து செல்லுபடியற்றது என்றும் தீர்ப்பளித்தது. இதேவகையான ஒரு தீரப்பு Ageska Umma Vs.Abdul Carim (1880) 04 SCC 13 (1 MMDLR - 20) என்ற வழக்கிலும் வழங்கப்பட்டிருந்தது.
இத்தீர்ப்புக்கள் முஸ்லிம் பிரதானிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தவே நீதியரசர் M.T. அக்பர் அவர்களின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது . இந்தக்குழுவின் அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களின் திருமணம் தொடர்பிலான வழக்குகளை கேட்டுத்தீர்க்க முதன்நிலை நியாயாதிக்கம் கொண்ட நீதிமன்றமாக காதி நீதிமன்றமும் (Quazi Court) அதன் தீர்ப்பிலிருந்து செய்யப்படும் மேன்முறையீடுகளைக் கேட்டுத்தீர்க்கும் மேன்முறையீட்டு நியாயதிக்கம் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றமாக காதிகள் சபையும் (Board of Quazi நிறுவப்பட வேண்டும் என விதந்துரைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் முஹம்மதியன் கோவையிலிருந்த சட்ட ஏற்பாடுகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு ஒரு பகுதி 1929 ம் ஆண்டில் 27 ம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து பதிவுச்சட்டம் என்ற தலைப்பிலும், மற்றைய பகுதி 1931 ம் ஆண்டின் முஸ்லிம் மரண சாசனமில்லா வாரிசுரிமை மற்றும் வக்புகள் சட்டம் என்ற தலைப்பிலும் சட்டமாக்கப்பட்டன.
எனினும் இதன் பின்னர் அமைக்கப்பட்ட சீர்திருத்தக் குழு ஒன்றின் சிபாரிசுகளை உள்ளடக்கியதாக இச்சட்டம் திருத்தப்பட்டு 1951 ம் ஆண்டின்13ம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச்சட்டமாக (MMDA ) சட்டமாக விதிப்பாக்கம் செய்யப்பட்டது .
1951ம் ஆண்டின் 13ம் (MMDA) விவாக மற்றும் விவாகரத்து தொடர்பான முஸ்லிம் சட்ட விதிகளை அங்கீகரித்துள்ள போதிலும் வழக்குகளின் நடபடிமுறைகள் (Procedure) முழுக்க முழுக்க நாடாளுமன்றத்தால் ஆக்கப்பட்ட விதிகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
1806ம் ஆண்டின் முஹம்மதிக்கோவையிலும் அதன் பின்னர் ஆக்கப்பட்ட சட்டங்களிலுமிருந்த பிரதான குறைபாடுகளில் ஒன்று யாதெனில், நீதிமன்றத்தின் முன்னுள்ள வழக்கில் பிணக்காக உள்ள விடயத்திற்குத் தீர்வுகாண அக்கோவையில் ஏற்பாடுகள் காணப்படவில்லையெனில் நீதிமன்றம் அவ்விடயம் தொடர்பில் உள்ளூர் மக்கள் மத்தியில் நிலவிய வழக்காறுகளின் அடிப்படையில் அவ்வழக்கைத் தீர்க்க வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 1951 ம் ஆண்டின் 13 ம் இலக்க MMDA சட்டத்தின்படி, நீதிமன்றத்திற்கு முன்னுள்ள ஒரு வழக்கில் எழுந்துள்ள பிணக்கிற்குத் தீர்வுகாண சட்ட ஏற்பாடுகள் எதுவும் அந்நியதிச்சட்டத்தில் இல்லாதுவிடின் அதற்குத் தீர்வுகாண (அசல்) முஸ்லிம் சட்டங்களை உசாத்துணை (Refer) செய்ய வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இச்சட்டம் முஸ்லிம் விவாகம், விவாகரத்து மற்றும் தாபரிப்பு போன்ற விடயங்களில் அசல் முஸ்லிம் சட்டம் பயன்படுத்தப்பட வழிகோலியது.
பின்னதாக MMDAக்குச் செய்யப்பட்ட திருத்தங்கள்:
இவ்வாறாக 1951 ம் ஆண்டின் 13 ம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் (MMDA) அதில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் அதற்கு முன்பிருந்த சட்டங்களுடன் ஒப்பிடும்போது முன்னேற்றகரமானதாக இருந்தபோதிலும் அச்சட்டம் கூட முஸ்லிம் சட்ட விதிகளைப் பூரணமாக உள்ளடக்கியதாகக் கோவைப்படுத்தப்படாததால் அச்சட்டம் பலமுறை திருத்தப்பட்டது . இச்சட்டம்
1954ம் ஆண்டின் 31ம் இலக்கச்சட்டம்
1955 ம் ஆண்டின் 22 ம் இலக்கச்சட்டம்
1965 ம் ஆண்டின் 01 ம் இலக்கச்சட்டம்
1965 ம் ஆண்டின் 05 ம் இலக்கச்சட்டம்
1969 ம் ஆண்டின் 32 ம் இலக்கச்சட்டம்
1975 ம் ஆண்டின் 41 ம் இலக்கச்சட்டம்
ஆகிய சட்டங்களின் மூலமாக இதுவரை ஆறு திருத்தங்களைச் சந்தித்துள்ளது.
பின்னதாக MMDA ஐத் திருத்துவதற்கு அமைக்கப்பட்ட குழுக்கள்:
1956ம் ஆண்டில் நாட்டில் விவாகம் மற்றும் விவாகரத்து தொடர்பில் நடைமுறையிலிருந்த சகல சட்டங்களையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக A.R.M. கனகரட்ண (QC) அவர்களின் தலைமையில் 13 நபர்களைக்கொண்ட ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு பொது விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்திலும் (GMO), கண்டியருக்கான விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்திலும், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்திலும் பல திருத்தங்களைச் சிபாரிசு செய்தது .
மீண்டும் 1972 ம் ஆண்டில் பதிவாளர் நாயகமாக இருந்த கலாநிதி H.M.Z.பாறூக்கின் தலைமைத்துவத்தில் அமைக்கப்பட்ட முஸ்லிம் சட்ட மறுசீரமைப்புக் குழு MMDA ற்கு கணிசமான சிபாரிசுகளைச் செய்தபோதிலும் இத்திருத்தங்கள் கவனத்திற் கொள்ளப் படவில்ல.
மீண்டும் 1984 ம் ஆண்டில் நீதியரசர் வணசுந்தரவின் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம் தனியார் சட்ட சீர்த்திருத்தக்குழு அமைக்கப்பட்ட போதிலும் இக்குழு இடையில் கலைக்கப்பட்டது.
1990 ம் ஆண்டில் கலாநிதி A.M.M. சஹாப்தீன் அவர்களின் தலைமையில் குழு வொன்றை அன்றைய முஸ்லிம் சமய, கலாச்சார அமைச்சர் நியமித்தார் . இக்குழுவில் நீதியரசர்களான M. ஜமீல் சலீம் மர்சூப் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
இக்குழு பல சிபாரிசுகளை முன்வைத்திருந்ததுடன் நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் சில திருத்தங்களையாவது செய்வது அவசியம் எனச் சிபாரிசு செய்தது.
கலாநிதி சஹாப்தீன் குழுவினரால் முன்வைக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டதும், சிறியதும், அவசியமானதுமான திருத்தங்கள் இதுவரை அரசாங்கத்தால் ஏற்கப்படவோ அமுல் செய்யப்படவோவில்லை .
2009ம் ஆண்டில் MMDAல் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்கான ஒரு குழுவை அமைச்சரவை நியமித்தது . இக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் நியமிக்கப்பட்டதுடன் இதன் ஏனைய அங்கத்தவர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் AWA சலாம் , மேல் நீதிமன்ற நீதிபதி முஹமது மக்கி , ஜனாதிபதி சட்டத்தரணி - பாயிஸ் முஸ்தபா , முன்னாள் சட்டமா அதிபர்- சிப்லி அஸீஸ் (P.C) பேராசிரியர் -சாரியா சஜரன்குவல் , கலாநிதி - A.M.A சுக்ரி , தேசபந்து - ஜெஸீமா இஸ்மாயில் , சட்டத்தரணிகளான நத்வி பஹியுடீன், ரஸ்மரா ஆப்தீன் , - சபானாகுல் பேகம் , பஸ்லற் சஹாப்தின் , பளீலா- B ஜுரம்பதி , முப்தி- M.L.M. றிஸ்வி , அஷ்ஷேக் M.M. அஹமட் முபாறக் , சர்மிலா றசூல் , தில்ஹாறா அமரசிங்க மற்றும் முன்னாள் மேலதிக சொலிசிட ஜெனரல் -சுகத கம்லத் ( P.C.) ஆகியோரும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இக்குழுவின் அங்கத்தவர்கள் கருத்துவேற்றுமை காரணமாக நீதியரசர்- சலீம் மர்சூபின் தலைமையில் ஒரு குழுவும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையில் ஒரு குழுவுமாகப் பிரிந்து இரண்டு வெவ்வேறான அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். இந்த அறிக்கைகளில் கணிசமான பல சிபாரிசுகள் முன்வைக்கப் பட்டன.
2019ம் ஆண்டு ஜுலை மாதம் (நீதியமைச்சராக ரவூப் ஹகீம் இருக்கும் போது) முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் நடாளுமன்ற உறுப்பினர்களும் MMDA ற்கான சில சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கினார். அதேயாண்டு ஓகஸ்ட் மாதத்தில் நீதியமைச்சராலும் முஸ்லிம் மதவிவகார அமைச்சராலும் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களை MMDA ற்குச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது . இருப்பினும் 2019 - நவம்பரில் நடாத்தப்பட்ட தேர்தலின் மூலம் அரசாங்கம் மாற்றமடைந்ததால் இந்தச் சீர்திருத்தங்கள் செயலுருப்பெறவில்லை.
2020ம் ஆண்டு ஓகஸ்ட் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி M.U. அலி சப்ரி அவர்கள் MMDA சீர்திருத்தப்படும் என அறிவித்தார்.
2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நீதியமைச்சர் அலி சப்ரி அவர்கள் திருமணத்திற்கான வயதெல்லையை அதிகரித்தல், மணமகளின் இணக்கத்தையும் கையொப்பத்தையும் திருமணப்பதிவில் இடம்பெறச்செய்தல், கைக்கூலியைத் திரும்பப் பெறுதல், மதாஹ் கொடுப்பனவுக்கான ஏற்பாடு, பெண்களையும் காதியாக நியமதித்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய MMDA வைத் திருத்துவதற்கான அமைச்சரைப் பத்திரத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.
2020டிசம்பர் மாத்தில் நீதியமைச்சர் அலி - சப்ரி, MMDA உட்பட நாட்டிலுள்ள முஸ்லிம் சட்டங்கள் அனைத்தையும் ஆராய்ந்து அவற்றில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்களைச் சிபாரிசு செய்யும் பொருட்டு ஓர் ஆலோசனைக் குழுவை நியமித்தார். இதன் தலைவராக சட்டத்தரணி -சப்ரி ஹலீம்தீன், அங்கத்தவர்களாக சட்டத்தரணி S.M.M. யாஸீன், சட்டபீட விரைவுரையாளர் M.A.M. ஹகீம், சட்டத்தரணி- சபான குல் பேகம், எர்மிஸா ரீகல், A.B.M. அஸ்ரப், M. அக்ரம் நூர் ஆமித், அஷ்சேக் - முயிஸ் புகாரி மற்றும் நாமிக் நபாத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர்,
2021 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைச்சரவை MMDA Act ல் திருத்தங்களைச் செய்ய அனுமதி வழங்கி சட்ட வரைஞர் திணைக்களத்தினரை (Legal Draftsman Department) ஏற்கனவே அமைச்சர் அலி - சப்ரியால் முன்வைக்கப்பட்ட திருத்தங் களுடன் காதிநீதிமன்ற முறைமையையும், முஸ்லிம் ஆண்களுக்குள்ள பலதார மணம் செய்யும் உரிமையையும் நீக்கும் வகையிலான சட்டத்திருத்தத்திற்கான வரைவை (Draft Bill) தயாரிக்குமாறு பணித்துள்ளது.
2021 ம் ஆண்டு ஜுன் மாதத்தில் 2020 ஆண்டு டிசம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்ட (சப்ரி நிலாம்தீன்) ஆலோசனைக்குழு MMDA த் திருத்துவதற்கான தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இதுவரை அவ்வறிக்கை வெளியிடப்படவில்லை.
MMDA இல் சுட்டிக்காண்பிக்கப்படும் குறைபாடுகள் :
தற்போது நடைமுறையிலுள்ள MMDA இல் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானோர்களால் அடிக்கடி எடுத்துக்காட்டப்படும் குறைபாடுகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. திருமணத்தைப் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்படவில்லை.
2. திருமணப்பதிவில் மணமகளின் கையொப்பம் பெறப்படுவதில்லை.
3. திருமணப் பதிவாளர்களாகவோ, நியாயசகாயர்களாகவோ, காதிகளாகவோ, காதிகள் சபை அங்கர்த்தவர்களாகவோ பெண்கள் நியமிக்கப்பட சட்டத்தில் ஏற்பாடில்லை.
4. காதிகளின் கல்வித்தகைமை குறிப்பிடப்படவில்லை.
5. திருமணம் செய்வதற்கான ஆகக்குறைந்த வயதெல்லை.
6. பலதாரமணம் (இறுக்கமான கட்டுப்பாடுகளின்றி) அனுமதிக்கப்பட்டுள்ளது .
7. ஆண் காரணமின்றி விவாகரத்துச் செய்யலாம்.
8. பெண் ஆணின் அனுமதியின்றி விவாகரத்துச் செய்யமுடியாது .
9. பிரிமனைப்பணம் (Alimony - Mathah) செலுத்தக் கட்டளையிட ஏற்பாடில்லை.
10. நடவடிக்கை முறைகளிலுள்ள இறுக்கமான அல்லது சிக்கல் நிறைந்த தன்மை.
மேலே பட்டியலிடப்பட்டுள்ள குறைபாடுகள் உட்பட மேலும் பல குறைபாடுகள் இச்சட்டத்தில் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்படினும் மிகக் குறைந்த சில விடயங்கள் மாத்திரமே தற்போது திருத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவைகளுள் உண்மையான குறைபாடுகள் எவை ?, குறைபாடுகளாகத் திரித்துக் மாற்றி காண்பிக்கப்படுபவை எவை ? என்பனபற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் விபரிக்கப்பட்டும்.
MMDA இல் எந்த அம்சங்கள் திருத்தப்படப்போகின்றன?
இச்சட்டத்தில் பெண்களின் உரிமைகளைப் பாதிப்பிற்குள்ளாக்கும் சில விடயங்களும், சில சிக்கலான நடவடிக்கை முறைகளும் (Complicative Procedure), அசல் முஸ்லிம் சட்டத்திற்கு மாற்றமான சில விடயங்களும் காணப்படுகின்ற போதிலும் பின்வரும் விடயங்கள் மாத்திரமே தற்போது திருத்தப்படப் போவதாகப் பேசப்படுகின்றது.
திருமணப்பதிவைக் கட்டாயமாக்குதல்.
திருமணப் பதிவில் மணமகளின் கையொப்பத்தையும் பெற்றுக் கொள்ளுதல்
பெண்களின் திருமண வயதெல்லையை 18 வயதாக உயர்த்துதல்
பெண்களையும் ஹாதி (Quazi) களாக நியமித்தல்
முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து மற்றும் பராமரிப்புக் கொடுப்பனவு தொடர்பான வழக்குகளைக் கேட்கும் அதிகாரத்தை காதி நீதி மன்றிளிருந்து நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு வழங்குதல்.
பலதார மணத்தை நீக்குதல்.
இந்த ஏற்பாட்டில் கூறப்பட்ட விடயம் யாதெனில் MMDA இல்லாதொழிக்கப்பட மாட்டாது ; பதிலாக MMDA மருசீரமைக்கப்படுவத்தின் ஊடாக முக்கியமான மாற்றங்களுடன் முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து மற்றும் பராமரிப்புக் கொடுப்பனவு தொடர்பான வழக்குகளைக் கேட்கும் அதிகாரத்தை காதி நீதி மன்றிளிருந்து நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு வழங்குதலாகும்.