11/06/2025
பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான உளவுத்தகவல்: இலங்கையில் உள்ள சாபாட் மையங்களுக்கு 24 மணி நேரமும் பொலிஸ் பாதுகாப்பு.
பிபிசி சிங்களம்.
பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான உளவுத்தகவல் காரணமாக, இஸ்ரேலிய பிரஜைகள் தமது மதக் கடமைகளுக்காக பயன்படுத்தும் இலங்கையில் உள்ள சாபாட் மையங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான உளவுத்தகவல் காரணமாக, இஸ்ரேலிய பிரஜைகள் தமது மதக் கடமைகளுக்காக பயன்படுத்தும் இலங்கையில் உள்ள சாபாட் மையங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் தெரிவித்ததாவது, பல பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள சாபாட் மையங்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மூலம் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலிய பிரஜைகள் தமது மதக் கடமைகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் உணவு மற்றும் பானங்கள் பெறுவதற்கு இந்த மையங்களைப் பயன்படுத்துவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணியாற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்ஸ்லர், பிபிசி சிங்களத்திடம் தெரிவித்ததாவது, “அந்த இடங்களுக்கு அச்சுறுத்தல் தொடர்பாக உளவுத்தகவல் கிடைத்துள்ளதால், இலங்கை பொலிஸார் தேவையான பாதுகாப்பை வழங்கியுள்ளனர்” என்றார்.
உளவுத்தகவல்களின் அடிப்படையில் கிடைத்த முக்கிய தகவல்கள் காரணமாக, இந்த அச்சுறுத்தல் குறித்து மேலதிக விவரங்களை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் தங்கியிருக்கும் எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாக அச்சுறுத்தல் இருந்தால், அதை மதிப்பீடு செய்து தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கையில் மத ஸ்தலங்களை பராமரிக்க அனுமதி உள்ளதா?
சாபாட் மையங்களை மத ஸ்தலங்களாக பராமரிப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக, புத்தசாஸன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் கூடுதல் செயலாளர் (மத விவகாரங்கள்) எச்.என். குமாரி, கடந்த ஆண்டு பிபிசி சிங்கள சேவையின் விசாரணையின்போது, கிறிஸ்தவ மதத்துக்கு அப்பாற்பட்ட மத ஸ்தலங்களை பதிவு செய்வதற்கு தற்போது விண்ணப்பப் படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“யூத மதத்துடன் தொடர்புடைய எந்தவொரு நிறுவனமும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. கிறிஸ்தவ மதம் தொடர்பான பணிகளை பெரும்பாலும் மத விவகாரப் பிரிவு மூலமே மேற்கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவ மதத்துடன் நேரடியாக தொடர்பில்லாதவற்றை பதிவு செய்யும் பணிகளை இப்போது தான் தொடங்கியுள்ளோம். ஆனால் இன்னும் அது தொடர்பான பணிகள் முடிவடையவில்லை.”
“வெளிநாடுகளில் இருந்து வந்து பல்வேறு ஜெப மையங்கள் போன்றவற்றை ஆரம்பிக்கின்றனர். அவற்றை பதிவு செய்ய ஒரு முறைமை இல்லை. இலங்கையின் அரசியலமைப்பின்படி, எவரும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உள்ளதால், பதிவு செய்ய விண்ணப்பப் படிவம் ஒன்றை தயாரித்துள்ளோம்.”
இலங்கையில் வெளிநாட்டு மத மையங்களை பதிவு செய்வதற்கு இதுவரை எந்தவொரு சட்டமும் இல்லை என்று புத்தசாஸன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் கூடுதல் செயலாளர் தெரிவித்தார்.
“சில சமயங்களில் விசா வழங்கப்படுகிறது. நீண்ட காலமாக சென்று வருபவர்களை பரிசோதித்த பின்னரே விசாக்கள் வழங்கப்படுகின்றன. கிறிஸ்தவ மதப் பணிகள் பிரிவு வழங்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து பின்னரே அந்தப் பணிகளை மேற்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பிபிசி சிங்களம் இன்று (ஜூன் 11) மேற்கொண்ட விசாரணையில், புத்தசாஸன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் கூடுதல் செயலாளர் (மத விவகாரங்கள்) எச்.என். குமாரி, தற்போது எல்ல பிரதேசத்தில் இவ்வாறு இரண்டு மையங்கள் இயங்குவதாக தகவல்கள் உள்ளதாக தெரிவித்தார்.
அந்த மையங்கள் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
“மற்றவை போன்று பதிவு தொடர்பாக எதுவும் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.
“பதிவு செய்வது கட்டாயமில்லை.
அரசியலமைப்பின்படி, எவரும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உள்ளது. பதிவு செய்ய வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.”
இலங்கையில் வெளிநாட்டு மத மையங்களை பதிவு செய்வதற்கு இதுவரை எந்தவொரு சட்டமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
“எங்களுக்கு அந்த நிறுவனங்கள் பற்றி எதுவும் தெரியாது. உயிர் பாதுகாப்புக்காக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதா என்பது குறித்தும் எங்களுக்கு தெரியாது,” என்று புத்தசாஸன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் கூடுதல் செயலாளர் மேலும் தெரிவித்தார்.