12/01/2026
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் Occ99 Association பழைய மாணவர் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 1999ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தினால் (OCC 99 Association) அதன் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு கடந்த 10.01.2026 சனிக்கிழமை மீராவோடை எல்லை வீதியில் அமைந்துள்ள
அந் நூர் கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் ஜே.எம். இம்தியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சுமார் 80 மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இம் மாணவர்கள் அனைவரும் OCC99 Association அமைப்பின் உறுப்பினர்களுடைய பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் உரையாற்றிய தலைவர் ஜே.எம். இம்தியாஸ், மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் சங்கம் முன்னெடுக்கவுள்ள பல முக்கிய திட்டங்களை அறிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம் (O/L) 9A மற்றும் உயர்தரப் (A/L) பரீட்சைகளில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் எனவும், பாடசாலை மட்டத்தில் நடைபெறும் பேச்சுப் போட்டி, ஆங்கிலத் தினம், கணிதப் போட்டி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாவட்ட, மாகாண மற்றும் அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப் பெற்று சாதனை படைக்கும் மாணவர்களுக்கு சங்கத்தின் சார்பாக தங்கப் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்படுவார்கள் எனவும் புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்யும் (ஹாபிழ்) மாணவர்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும் எனவும் தனது உறையில் குறிப்பிட்டார்.
அமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து அமைப்பினரால் பாடசாலை கற்றல் உபகரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்கான நிதிப் பங்களிப்பினை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் Occ99 Association மாணவர் சங்கத்தின் நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கியிருந்தனர்.
எதிர்காலத்திலும் இவ்வாறான பல சமூகப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைப்பினார் தெரிவித்தனர்.