25/08/2026
சீருடை தொடர்பில் இனவாத மோதல்கள் வேண்டாம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஊழியர் குழாமிற்கும் வைத்தியசாலைப் பணிப்பாளர்களுக்கும் இடையே எழுந்துள்ள நெருக்கடி நிலை தொடர்பில் சம உரிமை இயக்கம் ஊடகங்களுக்கு வெளியிடும் அறிக்கை
சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை மையமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மந்தமான தலையீடு தொடர்பாக முதலில் எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பிட்ட இந்த நெருக்கடியானது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஊழியர் குழாமின் சீருடை தொடர்பாகவே எழுந்துள்ளது. சுகாதார உதவியாளர் ஊழியர் குழாத்திற்காக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் கடந்த வாரம் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளுக்கு இணைக்கப்பட்டிருந்தனர். அந்தத் தரப்பினர் மத்தியில் முஸ்லிம் இளம் பெண்களும் உள்ளடங்கியிருந்ததுடன், அவர்கள் பொதுவாக உடுத்தும் போது பயன்படுத்தும் ஹிஜாப் உடன் சாதாரண சீருடைக்குக் கீழ் வெள்ளை நிற நீளக் காற்சட்டையையும் அணிந்து கொண்டு சேவைக்குச் சமூகமளித்திருந்தனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார உதவியாளர் ஊழியர் குழாமின் சீருடையில் மாற்றங்களை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலைப் பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். ஏனையவர்கள் பயன்படுத்துவது போன்றே சீருடையை மாத்திரம் அணிய வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும்.
வைத்தியசாலைப் பணிப்பாளரின் இந்தத் தீர்மானம் தொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன. அதாவது நீண்ட காலமாக வைத்தியசாலை சுகாதார உதவியாளர் ஊழியர் குழாம் மாத்திரம் அல்லாது முஸ்லிம் தேசிய மக்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தாதிய உத்தியோகத்தர்கள் கூட தமது சீருடையான வெள்ளை ஆடைக்குக் கீழ் நீளக் கால்சட்டை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை எமது அனுபவத்திலிருந்து அறிவோம். தற்பொழுதும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, ஒட்டமாவடி, ஏறாவூர், அக்கரைப்பற்று, நிந்தவூர், பொத்துவில் போன்ற அனைத்து ஆதார வைத்தியசாலைகளிலும், அனைத்துப் பிரதேச வைத்தியசாலைகளிலும் சேவையாற்றும் முஸ்லிம் சுகாதார உதவியாளர் ஊழியர் குழாமும், அவ் வைத்தியசாலைகளின் தாதிய உத்தியோகத்தர்களும் கடமை நேரங்களில் தமது சீருடையாக மேலே குறிப்பிட்ட வகையிலான சீருடையையே அணிகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமின்றி நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் இந்த நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது. அத்துடன் இது நீண்ட காலமாக நிலவி வரும் முறையாகும்.
விதிவிலக்குகளுடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட சீருடை பற்றிய இறுதித் தீர்மானம் தேசிய மட்டத்திலேயே எடுக்கப்பட வேண்டுமென்பதுடன் அதற்கான வழிமுறையும் காணப்படுகிறது. அவ்வாறிருக்கையில் வைத்தியசாலைப் பணிப்பாளரால் எடுக்கப்பட்ட மேற்கூறிப்பிட்ட தீர்மானத்தை எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது என்பதுடன் இவ்விடயத்தில் வைத்தியசாலைப் பணிப்பாளர் தன்னிச்சையான முறையிலேயே செயற்பட்டுள்ளார் என்பது புலனாகிறது.
எவ்வாறாயினும் வைத்தியசாலைப் பணிப்பாளரின் உத்தரவு காரணமாக அங்கு தோன்றிய அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார அமைச்சர் தலையிட்டுச் செய்துள்ள காரியமானது சுகாதார உதவியாளர் ஊழியர் குழாத்தைச் சார்ந்த குறித்த முஸ்லிம் இளம்பெண்கள் ஒன்பது பேரையும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்தமையாகும். அமைச்சரின் இத்தீர்மானம் காரணமாக இனவாத அமைதியின்மை ஒன்று தற்போது அப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் சில கடமைகளுக்காகச் சீருடைகளைப் பயன்படுத்துவது சாதாரண நிலையாகும். அதில் சில மாற்றங்களைச் செய்வது சீருடை தொடர்பான குழுவொன்றின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது. பொலிஸ் சீருடை தொடக்கம் பல சீருடைகள் காலப்போக்கில் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது அவ்வாறே ஆகும். இங்கு ஏதேனும் ஒரு தேசிய மக்கள் பிரிவு தமது கலாச்சார அடையாளம் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சீருடையைப் பயன்படுத்துவதற்காக எத்தகைய கோரிக்கையையும் முன்வைப்பதற்கான ஜனநாயக உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் இத்தகைய கோரிக்கைகளுக்கு மத்தியில் தீர்வுகள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போதும் அனைத்து தேசிய மக்கள் பிரிவுகளின் ஜனநாயக மற்றும் கலாச்சார சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் அது எடுக்கப்பட வேண்டும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர் உள்ளிட்ட இந்நாட்டில் வாழும் அனைத்து தேசிய மக்கள் பிரிவினரும் ஒன்றிணைந்து ஐக்கிய இலங்கைக் தேசத்தைக் கட்டியெழுப்பும் திசையை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதை சம உரிமை இயக்கம் எப்போதும் எதிர்பார்க்கிறது. எனினும் அது பலவந்தமாகவோ அல்லது தன்னிச்சையான முறையிலோ மேற்கொள்ளப்படக் கூடாது. மேலும் அது ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் அனைவரதும் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏதேனும் ஒரு மக்கள் சமூகத்தின் மத மற்றும் கலாச்சார நாட்டங்கள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான விடயங்களில் அரசாங்கமும் அதனுடன் தொடர்புடைய அமைச்சரொருவரும் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்பதை நாம் புதிதாகக் கூறத் தேவையில்லை. எனினும் குறிப்பிட்ட விடயத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் எத்தகைய பொறுப்புணர்வுமற்ற வகையிலேயே செயற்பட்டுள்ளார்.
வைத்தியசாலை ஊழியர்கள் ஒன்பது பேரையும் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்துவிட்டதாக அவர்கள் கருதினால் அது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதும் பொறுப்பற்றதுமான செயற்பாடாகும் என்பதை வலியுறுத்தும் சம உரிமை இயக்கம், இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மாத்திரமின்றி சுகாதார அமைச்சுடன் இணைந்து முறையான மீளாய்வு ஒன்றை மேற்கொண்டு எந்தவொரு ஊழியருக்கும் துன்புறுத்தல்களோ மன உளைச்சல்களோ ஏற்படாத வகையில் செயற்படுமாறு மீளவும் வலியுறுத்தி நிற்கின்றது.
அத்துடன் இன்னும் தீர்க்கப்படாது நிலவிவரும் தேசிய (இனப்) பிரச்சினை எனும் சிக்கலான அரசியல் பிரச்சனைக்குள் வைத்து இத்தீவிர நிலைகளைப் பார்ப்பதுடன், யுத்தம் நிலவிய காலப்பகுதியிலிருந்து விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற சனத்தொகை அமைப்பும் முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையே நிலவும் விரிசலுடனான நட்புறவின் சிக்கலான தன்மைகள் தொடர்பிலும் விசேடமாக கவனம் செலுத்தி இச்சமூகப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்திரானந்த டி சில்வா,
ஏற்பாட்டாளர்,
சம உரிமை இயக்கம்
2026.08.25