21/04/2025
#கிருஸ்தவ_அன்பு_உறவுகளே!
#நீதி_வேண்டிய_உங்கள்_பயணத்தில்_முஸ்லிம்களான_நாம்_எப்போதும்_இணைந்தேயிருப்போம்.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதியன்று ஸஹ்ரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் தலைமையில் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டு, இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய ஒரு குழுவினர் கிருஸ்தவ சமுதாய சகோதரர்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் சுமார் 250க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
அந்த அனைத்து உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
குறித்த தாக்குதல்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எவ்வித தொடர்புமில்லையென்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் பயங்கரவாதத்தையோ, தீவிரவாதத்தையோ ஆதரிப்பதில்லை என்பதுடன் தீவிரவாதத்தில் ஈடுபட்டு அநியாயமாக இன்னொரு உயிரைப் பறிக்கும் எவறும் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்பதும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான திருமறைக் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் ஆகும்.
இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபடும் தனி நபர்களானாலும், குழுக்கலானாலும் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களாகவே கருதப்படுவார்கள்.
ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்", "ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"
அல்குர்ஆன் 05:32
இஸ்லாம் மனித நேயத்தை வலியுறுத்தி மனிதர்களை வாழ வைக்கும் மார்க்கமே தவிர தீவிரவாதத்தையோ, பயங்கரவாதத்தையோ ஊக்குவித்து மனிதர்களை கொலை செய்யத் தூண்டும் மார்க்கம் அல்ல.
இஸ்லாத்தின் இறுதி இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரில் தமது இறுதி ஹஜ் புனித காரியத்தில் ஈடுபட்ட போது முஸ்லிம்களுக்கு வழங்கிய அற்புதமான ஓர் அறிவுரையை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்.
”உங்களுடைய இந்த (புனித) மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம், மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்.” எனக் கூறினார்கள்.
நூல், புகாரி - 1742
உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையில் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 06 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள கிருஸ்தவ சகோதரர்களின் கஷ்டத்திலும், கவலையிலும் முஸ்லிம் சகோதரர்களான நாம் எப்போதும் துணையிருப்போம். என்பதுடன்,
நீதி வேண்டும் உங்கள் பயணத்தில் எப்போதும் இணைந்தேயிருப்போம் என்பதையும் இவ்விடம் அன்பாகவும், உறுதியாகவும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
மத வழிபாடுகளை பின்பற்றுவதில் இஸ்லாமியர்களாக, பௌத்தர்களாக, கிருஸ்தவர்களாக பிரிந்திருந்தாலும் இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் என்றும் கைகோர்த்திருப்போம்.
•ரஸ்மின் MISc
21.04.2025