05/09/2025
ஊடக அறிக்கை.
குரல்கள் இயக்கம் அரசியல் சார்பற்ற ஒரு சிவில் சமூக இயக்கமாகும்.
குரல்கள் இயக்கத்தில் பல்வேறு கட்சி நிலைப்பாடுகளையுடையர்வர்கள் உறுப்பினர்களாக (non executive) உள்ளனர். குருக்கள்மட மனிதப் புதை குழி தொடர்பான வழக்கில் கட்சி சார்பான சிலரையும் குரல்கள் இயக்கம் தனது சட்டத்தரணிகளாக நியமித்துள்ளது. அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் கட்சி நிலைப்பாடுகளுக்கும் அதன் கோட்பாடுகளுக்கும், குரல்கள் இயக்கத்திற்கும் அதனால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற செயற்பாடுகளுக்கும் கிஞ்சித்தும் சம்மந்தம் கிடையாது என்பதை குரல்கள் இயக்கம் இவ் ஊடக அறிக்கையின் வாயிலாக அறியத்தருகின்றது.
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான குரல்கள் இயக்கத்தின் இயங்கியலானது எந்தவோர் அரசியல்வாதியினதும் அல்லது அரசியல் கட்சியினதும் ஆலோசனைகளோ, ஆதரவுகளோ, ஒத்தாசைகளோ, நெறிப்படுத்தல்களோ அல்லது உந்துதல்களோ இல்லாமல் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் பங்கேற்புடன் முற்றுமுழுதாக குரல்கள் இயக்கத்தினால் சுயாதீனமாக மேள்கொள்ளப்பட்டுவருகின்ற ஓர் எத்தனமாகும் என்பதை குரல்கள் இயக்கம் ஞாபகமூட்ட விரும்புகின்றது.
வரலாற்றுத் திருப்பம் மிக்க இத்தருணத்தில், குருக்கள் மடம் மனிதப் புதைகுழி தொடர்பான விவகாரத்தை அரசியல் மயப்படுத்தி அரசியல் இலாபமீட்ட முயல்வது அல்லது அதற்கான மலிவான பிரயத்தனங்களில் ஈடுபடுவதானது புதையுண்டு போனவர்களுக்கான நீதியையும் அவர்களோடு புதையுண்டு போகச் செய்வதற்கான கைங்கரியமாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே, சகல தரப்பினரும் இவ் விவகாரத்தை குறுகிய அரசியல் அடைவுகளுக்காக பயன்படுத்துவதை விட்டும் முற்றாகத் தவிர்ந்து கொள்ளுமாறு குரல்கள் இயக்கம் இத்தால் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றது.
குரல்கள் இயக்கம் தனது சகல நடவடிக்கைகளிலும் அரசியல் சார்பின்மையைத் தொடர்ந்தும் பேணிவருவதோடு அந்நிலைப்பாட்டைப் பாதுகாக்க உறுதியாக திடசங்கற்பம் பூண்டுள்ளது என்பதையும் இச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகின்றது.