09/05/2026
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி கடந்த 12 ஆண்டுகளாக அரச அங்கீகாரத்துடனான NVQ சான்றிதழ் பயிற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு தொழில்திறன்களை வழங்கி வருகின்றது. 2012 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இக்கல்லூரியானது, மூன்றாம் நிலை மற்றும் தொழில் பயிற்சி ஆணையம் (TVEC) இன் கீழ் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பயிற்சி நிறுவனமாகும்.
பின்தங்கிய மற்றும் வளம் குறைந்த சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை மையமாகக் கொண்டு, தொழில்முறை அறிவு, நடைமுறை அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு NVQ பயிற்சி நெறிகள், திறன் மேம்பாட்டு பாடநெறிகள், மொழிப் பயிற்சிகள் மற்றும் தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், தொழில்திறன் பயிற்சிகளுடன் இணைந்து வாழ்க்கைத்திறன் பயிற்சிகள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்படுவதன் மூலம், இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை உறுதியான பாதையில் அமைத்துக்கொள்ளவும், தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் சாதனையாளர்களாக உருவெடுக்கவும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தொடர்ச்சியான சேவையை வழங்கி வருகின்றது.
அந்த வகையில், எதிர்கால சமுதாயமான தற்போதைய இளையோர் மற்றும் யுவதிகள் தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு திசைதிருப்பல்களுக்கு உள்ளாகுவதுடன், பலர் மனஅழுத்தங்களினாலும் பாதிக்கப்பட்டு கல்வி மற்றும் தொழில்துறைகளில் சரியான முறையில் முன்னேற முடியாமல் திசைமாறிச் செல்கின்றனர்.
இவ்வாறான நிலையில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் 08.05.2026 அன்று மனஅழுத்தத்தைக் குறைப்பதற்கான தியானத்துடன் இணைந்த மூச்சுப் பயிற்சி, கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் செயற்றிட்ட முகாமையாளர் திருமதி ஹ. கிந்துஜா மற்றும் கல்லூரியின் வளவாளர்கள் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.