26/02/2026
📰 மட்டக்களப்பு நடிகருக்கு இந்திய பத்திரிகையில் அங்கீகாரம்
இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த நடிகர் “வேட்டையன்” இம்ரான், இந்தியாவில் தென் இந்திய தமிழ் திரைப்படங்களை மையமாகக் கொண்டு வெளிவரும் பிரபல வார இதழான “சினிமா விளக்கு” பத்திரிகையில் இடம்பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகின் புதிய முகங்களையும், திறமையான கலைஞர்களையும் தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டி வரும் இந்த இந்திய வார இதழில், எமதுமண்ணின் நடிகரான இம்ரான் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது என்பது மட்டக்களப்பு கலை உலகிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
பல திரைப்படங்களில் அதிரடி வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துத் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள “வேட்டையன்” இம்ரான், தற்போது பல்வேறு படைப்புகளில் புதிய பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அவரது கலைப் பயணமும் வளர்ச்சியும் இந்த செய்தியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் மட்டத்தை தாண்டி, இந்திய அளவிலும் கவனம் பெறத் தொடங்கியுள்ள இந்த அங்கீகாரம், அவரின் கலைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு கலைஞர் இந்திய ஊடகங்களில் இடம்பிடித்திருப்பது, உள்ளூர் கலைஞர்களுக்குப் புதிய ஊக்கத்தை அளிக்கும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.