21/09/2025
பாடசாலையும் - மாணவர்களின் ஒழுக்கமும்
பிள்ளையின் நடத்தையில் தான் பெற்றோரின் வளர்ப்பு தெரியும் நாம் அழகாக உடுத்துக்கொள்ள வேண்டுமென்பதை விட
பிள்ளையை அழகாக வளர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
நமது பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் அள்ளிவழங்கும் நம்மால் அவர்களின் ஒழுக்க விடயங்களில் கவனம் செலுத்துவதில் தவறுவிடுகின்றோம். கற்றலுக்கு கோடிகளை செலவிட தயாறான நாம் ஒழுக்க விடயத்தில் சதமேனும் செலவிட தயாறில்லை. ஒழுக்கம் பணம் கொடுத்து வாங்கப்படுகின்ற பொருளுமல்ல, அவை பெற்றோரிடம் இருந்து முறைமாற்றலாக பெறப்படவேண்டிய ஒரு அம்சம்.
இன்றைய பாடசாலை சூழல்களில் உள்ள மாணவர்களினால் அனேகமான பெற்றோரின் மானம், மரியாதை , சுயகெளரவம் என்பவை அடகு வைக்கப்பட்டுள்ளது என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்,
பாடசாலைகளிலே அதிகமான நேரங்களை செலவிடும் நமது பிள்ளைகளின் ஒழுக்க விடயங்கள் தொடர்பில் நாம் எத்தனைபேர் கரிசணை கொள்கின்றோம். நாம் சமூகத்தில் எவ்வளவுதான் அந்தஸ்தில் இருந்தாலும் நமது அந்தஸ்தை பாதுகாக்க தெரியாத பிள்ளைகள் எதற்கு என்று எப்போதாவது சிந்தித்துள்ளோமா?
நமது பிள்ளைகளின் ஒழுக்கம் தொடர்பில் அந்த வகுப்பாசிரியரிடம் அல்லது அதிபரிடம் எப்போதாவது வினவியுள்ளோமா? அந்த ஆசிரியர்கள், அதிபர் சொல்லுகின்ற முறைப்பாட்டில் எதனையாவது கண்டுகொண்டுள்ளோமா? அல்லது ஏற்றுக்கொண்டுள்ளோமா?
எப்போதுமே பிள்ளைகளின் விடயத்தில் அதீத நம்பிக்கை கொண்டுள்ள நாம் அவர்களை நல்வழிப்படுத்துவதில் அசிரத்தையாகவே இருக்கின்றோம்.
ஒரு ஆசிரியர் நமது பிள்ளையின் நடத்தை பற்றி சொல்கின்ற போது ஆசிரியர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த எத்தணிக்கும் எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளின் நடத்தைகளில் அவதானத்தை செலுத்தியுள்ளோம். ஒழுக்கமின்மையான செயற்பாடுகளை கண்டிக்க காலதாமதமாகுகின்ற போது அது புற்றுநோய் போல் பாடசாலைகள் முழுவதும் பரவகின்ற ஆபத்தான நிலை தோற்றம்பெறுகின்றது.
கடந்த பத்து / பதினைந்து வருடங்களுக்குள் அதிபர், ஆசிரியர்கள் தங்களது பணிகளை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. மாணவர்களின் ஒழுக்க நிலையில் அதீத அக்கரறை கொள்வதில் பின்நிற்கிற நிலை மேலோங்கியுள்ளது. கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுடன் தங்களை மட்டுப்படுத்தும் நிலைக்குள் ஆளாகியுள்ளனர். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மருகிப்போன சூழலில் அதன் சுமையை எந்த அதிபரும், ஆசிரியரும் தனது தோள்மீது சுமப்பதற்கு தயாறில்லை. மாணவர்களின் ஒழுக்க நிலை பற்றி பேசுவதற்கு அழைக்கின்ற போது தந்தையர்கள் வருவதனை விட தாய்மார்கள் வருவதும் இந்த நிலை மேலோங்க காரணமாகின்றது.
ஒரு மாணவர் தொடர்பில் பாடசாலையினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பெற்றோரின் கவனக் குவிப்பு மாணவனின் எதிர்காலம் தொடர்பானதாகவே அமைதல் அவசியம். எந்த ஒரு மாணவனின் மீதும் யாரும் வேண்டுமென்றான குற்றச்சாட்டை சுமத்துவதில்லை. அதற்கான தேவையும் அவர்களிடம் இல்லை. “மாணவன் சிகரட் பிடிக்கிறான் கொஞ்சம் கவனியுங்கள் “ என்று ஆசிரியர் சொன்னால், ஏன் அப்படி சொல்லி எனது பிள்ளையை அவமானப்படுத்துகின்றீர்கள் என்று சொல்வதும், சிகரட் தானே அடிக்கிறான் அவன் திருந்திவிடுவான் என்று சொல்வதும் எவ்வளவு அபத்தமானது என்பதனை எப்போது புரிந்துகொள்ளப்போகின்றோம்.
“ஒழுக்கம் பற்றி பேசினால் நீங்கள் கற்றுத்தரவந்தால் கற்றுத்தாருங்கள் எங்களுக்கு உங்களது ஆலோசனைகள் தேவையில்லை” என பெற்றோர்கள் முன்னிலையில் ஆசிரியர்களிடம் சொல்லுகிற மாணவர்களால் ஏற்படுகின்ற சமூகமாற்றம் எவ்வகையானது ? அவர்கள் என்னதான் உயர்பதவியை வகித்தாலும் அது ஏதாவது பெறுமானத்தை பெற்றுத்தருமா? .
ஒரு காலத்தில் “கண்ணை மட்டும் வைத்துவிட்டு உரியுங்கள் சேர்” என்று சொன்ன சமூகத்தில் சிறியதாகவேணும் தண்டித்தால் சட்டத்தின் உச்சத்தை தொட்டேனும் பாடசாலையையும், ஆசிரியரையும் சந்திக்கு இழுக்கத் தொடங்கிய காலத்தில் ஒழுக்கத்தை மிக இலகுவாக எதிர்பார்க்கவும் முடியாது. அந்த ஒழுக்கத்தை போதிக்கும் பொறுப்பு பெற்றோர்களிடத்திலேயே பொறுப்புச் சாட்டப்பட்டுள்ளது என்பதனை கணிக்கத் தவறுகின்றோம்.
ஆசிரியர்கள் ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக அச்சடிக்கப்பட்ட புத்தகத்திலுள்ள பக்கங்களை விளங்கப்படுத்தும் இலகுபடுத்தனர்களாகவே கடமையாற்றுகின்ற துரதிஷ்டவசமான சூழலுக்கு பெற்றோர்களாகிய நாமே தள்ளவிட்டுள்ளோம். தள்ளிவிட்டது மாத்திரமல்லாமல், ஒழுக்கம் போதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டையும் சுமத்துகின்றோம்.
மாணவர்களுக்கு தேவையான அத்தனையையும் பார்த்து பார்த்து வாங்கிக் கொடுக்கின்ற நம்மால் ஏன் ஒழுக்கம் தொடர்பில் கவனமெடுக்க முடியாமல் போகிறது.
ஒழுக்கம் என்றால் என்ன என்கிற கேள்வியும் எழுகின்றதுதானே, பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு வருவது தொடக்கம் கடைசி பாடவேளை வரைக்கும் வகுப்பறையில் இருந்து கற்றல் செயற்பாட்டை முறையாக பெற்ற்றுக்கொள்வதுடன், இன்னொரு மாணவனுக்கு அல்லது வகுப்புக்கு இடையூறின்றி செயற்படுதல் என்பது சுருக்கமாக விளங்கிக்கொள்வதாகும்.
ஆனால் இன்று என்ன நடைபெறுகிறது இவைகள் தலைகீழாக நடைபெறுவதுடன் நின்றுவிடாது ஆசிரியர்களை கேலி செய்வதுடன், ஏனைய மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயற்பாடு சுலபமாகவே நடந்தேறுகிறது. போதாமைக்கு பாடசாலை கலைந்து பிரத்தியேக வகுப்புக்கு செல்லும்போதும் இந்த நையாண்டி சேட்டைகளுக்கு குறைவேயில்லை.
எனவே நம்மிடம் என்னதான் அறிவும், அனுபவமும், பணமும் இருந்தாலும் கெளரவத்தை அடமானம் வைக்கின்ற பிள்ளைகளால் ஆகப்போவது என்ன? ஆசிரியர்களின் சாபத்தை பெறுகின்ற இவ்வாறான பிள்ளைகள் எதனைச் சாதிக்கப்போகிறார்கள் இந்த சமுகத்தில். இவர்களாக சமூகமாற்றத்திற்கான தலைவர்கள்? அவர்களின் பெற்றோர்களா நாம்? என்கிற ஏராளமான கேள்விக்கு நாம் வழங்கும் பதில் என்ன?
எனவே பிள்ளைகள் விடயத்தில் கண்டிப்பாக நடப்பது பெற்றோர்களாகிய நமது கடமை. தவறே செய்யமாட்டான் என்கிற நிலையில் இருந்து மாறி நடந்துள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி பிள்ளைகளை மீட்டெடுப்பதற்காக முயற்சிக்கு முக்கியத்துவம் வழங்குவோம். மாணவர் சமூகத்தை ஒழுக்கமுள்ள, முன்மாதிரி மிகுந்த சமூகமாக வளர்த்தெடுப்போம்.
றிசாத் ஏ காதர்
ஊடகவியலாளர்