22/05/2026
*வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் மாதிரி" என கூறிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேச்சுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம்.*
தமிழ்நாடு முழுவதும் மே 24 கண்டன பேரணி
வேலையில்லாத இளைஞர்கள், சமூகத்தில் 'கரப்பான் பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' போலச் செயல்பட்டு, ஊடகம் மற்றும் சமூக ஆர்வலர்களாக மாறி ஒட்டுமொத்த அமைப்பையும் தாக்குகிறார்கள் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடுமையான வார்த்தைகளால் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது வேலையில்லாத இளைஞர்களின் மீது தொடுக்கும் பெரும் தாக்குதலாகும்.
டெல்லியில் மே 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, வழக்கறிஞர் ஒருவர் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் விசாரித்து வந்தார். அப்போது, தலைமை நீதிபதி கூறுகையில், "சமூகத்தில் அமைப்பைத் தாக்கும் சில ஒட்டுண்ணிகள் உள்ளனர். இதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை, தொழில் வாழ்க்கையிலும் எந்த இடமும் கிடைப்பதில்லை. அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சிலர் சமூக ஊடகங்களில் தீவிரமாகவும், சிலர் RTI ஆர்வலர்களாகவும் மாறி, பின்னர் அனைவரையும் இணையத்தில் தாக்கத் தொடங்குகின்றனர்" என நீதிபதி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் Cockroach Janta Party (CJP) கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என இணையத்தில் புதிய இன்ஸ்டாகிராம் பக்க கணக்கை உருவாக்கியது இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள ஆளும் அரசியல் கட்சிகளின் இன்ஸ்டாகிராம் கணக்கை மிஞ்சி CJP எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் பரவிய விவாதங்களின்படி, இளைஞர்களை “சமூக ஊடக அடிமைகள் , பயனற்ற தலைமுறை, முட்டாள்தனமான டிஜிட்டல் கூட்டம்” என்று பாஜக மதவெறி கூட்டங்களிருந்து வந்த விமர்சனங்களுக்கு எதிரான பதிலடியாகவே இந்த இயக்கம் உருவாகியுள்ளது, வேலையின்மை பிரச்சனை மற்றும் சமீபத்தில் நீட் வினாத்தாள் கசிந்ததில் ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என தொடர்ச்சியாக இணையத்தில் CJP குரல் கொடுத்து வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்பது வெறும் நகைச்சுவை இணைய பக்கம் மட்டுமல்ல. அது இந்திய இளைஞர்களின் அரசியல் விரக்தி, சமூக கோபம், டிஜிட்டல் தலைமுறை உணர்வு, அதிகார எதிர்ப்பு மனநிலை கொண்ட இணைய வடிவமாக பார்க்கப்பட வேண்டும்.
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய ஒன்றிய அரசே அதன் நீதித்துறை நிர்வாகம் வேலையில்லாத இளைஞர்களைப் பற்றி அவதூறாக பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, இந்திய நாட்டில் அரசு நிர்வாகம் தவறு செய்தால் அதை இணையத்தில் தட்டி கேட்டால் இளைஞர்களை அவதூறாக பேசுவது வன்மையாக கண்டிக்க கூடியதாகும், ஒன்றிய அரசு ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன் என்ற வாக்குறுதி இன்று நீர்த்துப் போய்விட்டது, எனவே இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அரசு உரிய கவனம் செலுத்திட வேண்டும்.
அதில் கவனம் செலுத்தாமல் ஒன்றிய அரசு தற்போது இந்த புதிய அமைப்பின் சமூகவலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளது ஜனநாயகத்திற்கு எதிரானது. அந்த முடக்கம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
இளைஞர்களை அவதூறாக பேசிய நீதிபதி கருத்துக்கு எதிராகவும், ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி உறுதிப்படுத்திட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு முழுவதும் கரப்பான் பூச்சி மாதிரி ஊர்வலங்களை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மே 24 அன்று நடத்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு அறைகூவல் விடுக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.
செல்வராஜ்
மாநிலத் தலைவர்
எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்
#தமிழ்நாடு