05/05/2026
*தமிழகத்தில் தவெக ஆட்சி – தவ்ஹீத் ஜமாஅத் TNTJ பார்வை*
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில், தமிழக வெற்றி கழகம் (தவெக) தனது அறிமுகத் தேர்தலிலேயே அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
தமிழக மக்கள் திமுக – அதிமுக அல்லாத ஒரு கட்சி தமிழகத்தை ஆள வேண்டும் என்ற மாற்றத்தை விரும்பியதை இது தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளது. அரசியல் அனுபவம், கட்சிப் பாரம்பரியம் ஆகியவற்றை பின்னுக்குள்ளி விஜய் மீதான ஈர்ப்பே இந்த வெற்றிக்கு அடித்தளமாகும். மக்கள் விரும்பிய மாற்றம் நடைபெறுமா என்பதை தவெகவின் வருங்கால ஆட்சியில் தான் கண்டுணர முடியும்.
எனினும் இந்த தேர்தல் முடிவுகள் மிக முக்கியமான விஷயங்களை தெளிவாக உணர்த்துகின்றன.
அவற்றில் மிக முக்கியமான அம்சம், பாஜக - அதிமுக கூட்டணியை மக்கள் முற்றிலுமாகப் புறக்கணித்திருப்பதுதான். பாஜக 27 இடங்களில் போட்டியிட்டு, தாமரை சின்னம் 33 இடங்களில் களம் கண்டும், ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது அக்கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அரசியல் அனுபவம் இல்லாதவர்களிடம் கூட ஆட்சியை ஒப்படைப்போம், ஆனால் பாஜக மற்றும் அதன் கூட்டணியிடம் தமிழகத்தை ஒப்படைக்க மாட்டோம் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக இருந்துள்ளனர். பாஜக எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் இது.
திமுக தலைவர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அதிமுக-வின் முக்கிய ஜாம்பவான்கள் பலரும் தவெகவின் வேட்பாளர்களிடம் தோல்வியை தழுவியுள்ளார்கள். இது அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
தவெக பெற்ற வெற்றியை வெறும் திரைக்கவர்ச்சி என்று சுருக்கி தங்களது குறைகளை ஆண்ட கட்சிகள் மறைத்து கொள்ளக் கூடாது. மாறாக தங்கள் கட்சியை முழுமையான சுயபரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் புதிய வாக்காளர்களையும் இளம்தலைமுறையையும் கவர்வதில் எங்கே தோற்றோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
தமிழக ஊடகங்களின் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகி உள்ளது. மக்கள் செல்லும் திசையை எந்த ஊடகத்தாலும் கண்டுணர முடியவில்லை. அவரவர் முன்முடிவுடன் கூடிய கட்சி சார்பு அல்லது எதிர்ப்பு நிலையின் படி தான் கருத்துகளை அள்ளித்தெளித்திருக்கிறார்கள். இனியாவது விருப்பு வெறுப்பின்றி ஊடகங்கள் செயல்பட முன்வர வேண்டும்.
அமையவிருக்கும் சட்டமன்றத்தில் 9 முஸ்லிம் உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக அடியெடுத்து வைக்கின்றனர். மஜக அன்சாரி, மமக ஜவாஹிருல்லாஹ், மற்றும் திமுக வஹ்ஹாப் ஆகியோரை தவிர, முஸ்லீம் லீக், காங்கிரஸ், தவெக சார்பில் தேர்வாகியுள்ள ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் எனப் பெரும்பாலானோர் புதியவர்களாக உள்ளனர்.
அனைவரும் தங்கள் கட்சித் தலைவர்களைப் புகழ்வதிலோ அல்லது தங்கள் கட்சி எடுக்கும் மக்கள் விரோத முடிவுகளை நியாயப்படுத்துவதிலோ நேரத்தைச் செலவிடக் கூடாது.
மாறாக, சட்டமன்றத்தில் சமுதாயக் கோரிக்கைகளைத் துணிச்சலுடன் முன்னிறுத்திச் செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்காக அவர்கள் எழுப்பும் குரலே இளம் தலைமுறையினரின் ஏகோபித்த ஆதரவைத் தொடர்ந்து பெற வழிவகுக்கும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை, யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதிலேயே உறுதியாக இருந்தது; அந்த வகையில் பாஜக ஒரு இடத்தில் சுருண்டிருப்பது உள்ளபடியே நமக்கு மகிழ்ச்சியே. மேலும் தமிழக மக்களுக்கு நன்மையே.
எனினும் இந்த சூழலை அப்படியே கடந்து போக முடியாது.
தவெக தனிப்பெரும்பான்மை பெறாத சூழலில் பாஜகவின் நரித்தந்திரத்திற்கு தமிழகம் பலியாகி விடக்கூடாது. மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் செய்தது போல குதிரை பேரம் பேசி பாஜக உள்ளே நுழைய முயற்சிக்கும். ஜனநாயக சக்திகள் விழிப்புடன் இருப்பதுடன் அதிமுக பாஜக பக்கம் தவெக சாய்வதை தடுக்கும் வகையில் பிற ஜனநாயக கட்சிகள் செயல்பட வேண்டும். அதுவே தமிழகத்தின் நலன்களுக்கு நல்லது. கொள்ளைப்புற வழியாக பாஜக ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது.
இறுதியாக தவெக தனித்த பெரும் கட்சியாக உருவாகி விட்டது. தற்போதைய நிலையில் திமுக அதிமுகவை மிஞ்சி முதல் இடம் வகிக்கின்றது.
பிஜேபியுடன் கைகோர்த்ததால் அதிமுகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.
அதே நேரம் திமுகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கி இருக்கிறார்கள். திமுகவின் முக்கிய புள்ளிகள் தோற்றாலும் எதிர்க்கட்சி தகுதியை திமுகவிற்கே மக்கள் வழங்கி உள்ளார்கள் என்பது அக்கட்சிக்கு ஆறுதலான விஷயமே!
எனவே தட்டிக் கொடுக்கும் விஷயத்தில் தட்டிக் கொடுத்தும் எதிர்த்து குரல் எழுப்பும் விஷயத்தில் எதிர்க்குரல் எழுப்பியும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்கி சிறந்த எதிர்க்கட்சியாக திகழ வேண்டும்.
இழந்த இளம்தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் செயல்படும் திறன் திமுகவிற்கு உண்டு.
த.வெ.க வின் இத்தகைய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் சாதி, மத எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் விஜய்யை நம்பி வாக்களித்துள்ளனர் என்பதால் தான். ஆகவே தான் ஒன்றரை கோடி வாக்குகள் சாத்தியமாகி உள்ளது. எனவே, தவெக தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது அளித்த வாக்குறுதிகளின் படி, எவ்வித சாதி, மத பாகுபாடுகளுமின்றி சமத்துவமான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை வழங்க உறுதிபூண வேண்டும்.
புதிய கட்சியாக ஆட்சிக் கட்டிலில் அமரும்போது, நிர்வாகச் சிக்கல்களைக் கையாளவும் சரியான திசையில் பயணிக்கவும் அனுபவம் வாய்ந்த வல்லுநர்களையும், பொதுவாழ்வில் நற்பெயர் பெற்ற நல்லோர்களையும் உடன் வைத்துக்கொள்வது விஜய்யிற்குப் பெரும் பலமாக அமையும். அதே வேளையில், எந்தவொரு சூழ்நிலையிலும் விஜய் அவர்கள் மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து போகும் 'எடுப்பார் கைப்பிள்ளை'யாக மாறிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, பாஜக-வை கொள்கை எதிரி என்று கூறியதில் உறுதியாக இருந்து, தனது ஆட்சியில் அந்த சாயல் கொஞ்சமும் வெளிப்படாத வகையில் பாஜகவின் நிழல் கூட தன்னை அண்டாத வகையில் விலகி இருக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.