12/06/2024
குடிநீர்
நமது சித்த மருத்துவத்தில், நோயரின் நோய் அறிகுறிகளை விரைவாகக் குறைக்கும் மருந்து குடிநீரே ஆகும். ஒன்றோ, ஒன்றுக்கும் மேற்பட்ட உலர்ந்த (அ) பச்சை மூலிகைச் சரக்குகளையோ ஒன்றிரண்டாகப் பொடி செய்து அதனுடன் தண்ணீர் சேர்த்து 1/4,1/8,1/32,1/64 பங்காக வற்ற வைத்து வடிகட்டிக் குடிப்பதுதான் குடிநீர் ஆகும்.
குமரி மாவட்டம் மற்றும் தென் திருவிதாங்கூர் பகுதிகளில் 86 மூலிகை சரக்குகள் சேரும் வலிய அங்காடி கசாயம் என்று ஒரு குடிநீர் முறை இன்றளவும் நடைமுறையில் உள்ளது. குடிநீர் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான வடமொழிச் சொல் கசாயம் ஆகும். நிலவேம்புக்குடிநீர் கபசுரக்குடிநீர் முதலியவை புகழ்பெறும் முன்னரே தென் மாவட்டங்களிலே விசக்குடிநீர் என்ற பெயருடன் காய்ச்சல் கசாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. உள்மருந்துகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் குடிநீர் பற்றி அதிகம் பேசும் நமது சித்த மருத்துவ நூற்கள் கண்ணுசாமிப்பிள்ளையின் மருத்துவ நூற்களே ஆகும். நமது சித்த மருத்துவ மூல நூற்களிலே குடிநீர் பற்றி அதிகம் பேசப்படவில்லை. தேரன் குடிநீர் - 100 என்னும் மூலநூல் உள்ளது. கண்ணுசாமி சிகிச்சாரத்னதீபம் முதல் பாகத்தில் 59 வகை கசாயங்களும், கண்ணுசாமி வைத்திய சிந்தாமணியில் 16 வகை கியாழங்களும், கண்ணுசாமி பரம்பரை வைத்தியத்தில் 56 வகை கியாழங்களும், சித்த வைத்தியத்திரட்டில் 12 வகை குடிநீர்களும் கூறப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் கசாயம் எனும் வார்த்தையை பயன்படுத்த கண்ணுசாமிப்பிள்ளை அடுத்தடுத்த பாகங்களில் கியாழம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்.
கண்ணுசாமியின் அனைத்து நூற்களிலும் உள்ள கியாழ முறைகளிலும், சரக்குகளை ஒரு குறிப்பிட்ட அளவுப்படி எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, இடித்த முழு சரக்கு அளவையும் அப்படியே பாத்திரத்தில் போட்டு, குறிப்பிட்ட அளவுப்படி தண்ணீர் சேர்த்து அதை நான்கில் ஒன்றாக வற்ற வைத்து வடிகட்டி, அதை 3 (அ) 4 பங்காக்கி ஒவ்வொரு 3மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று நாம் நோயாளிகளுக்கு அறிவுறுத்துவது ஒரு தேக்கரண்டி (5 - 6 கிராம்) கசாயப்பொடியுடன் 2
டம்ளர் தண்ணீர் சேர்த்து 1/2 டம்ளராக வற்றவைத்து வடிகட்டி குடிக்கச் சொல்கிறோம். நாம் எடுக்கிற 1 தேக்கரண்டி கசாயப்பொடியில் சொல்லப்பட்ட குடிநீர் தயாரிப்பில் உள்ள அனைத்து மூலிகைப் பொருட்களும் இருக்குமா என்பது கேள்விக்குறியே?
கண்ணுச்சாமி நூற்களில் உள்ள ஒரு சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். (எடுத்துக்காட்டு 1 : கண்ணுச்சாமி சிகிச்சாரத்ன தீபம்: பக்கம் 87)
சுரக்கசாயம் :
நிலவேம்பு, கோரைக்கிழங்கு, கடுகுரோகிணி, பற்படாகம், சீந்தில் கொடி, வேப்பம்பட்டை வகைக்கு தோலா - 1 (11.7 கி)
இவற்றை 1/2 படி ஜலத்தில் இடித்துப் போட்டு 2 மணிநேரம் ஊறினபடி, 1/2 ஆழாக்குக்கு குறையாமல் காய்ச்சி, அதனை மூன்று வேளைக்குப் பகுத்து 4 மணி நேரத்துக்கொரு முறை உட்கொள்ள குளிர்சரம் முதல் எல்லாவகைக் காய்ச்சல்களும் குணப்படும்.
விளக்கம் :
6 சரக்குகள் வகைக்கு 11.7 கி எடுத்து மொத்தம் 72.2 கிராம் வரும். அந்த அளவு சரக்குடன் 1/2 படி என்பது ஏறக்குறைய 675 மிலி தண்ணீர் சேர்த்து 1/2 ஆழாக்காக வற்ற வைத்து என்பது (1 ஆழாக்கு -168 மிலி) 1/2 ஆழாக்கு - 84 மிலியாக வற்ற வைத்து வடிகட்டி மூன்று பங்காகப் பகுத்து, என்பது 28 மி.லி (30மிலி) குடிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழும்பும். குடிநீரின் ஆயுட்காலம் என்று நமது மருத்துவ நூல்கள் 3 மணி நேரம் தானே குறிப்பிட்டுள்ளன. இப்படி ஒருநாள் முழுவதும் வைத்திருந்துது குடிப்பது? இந்த இடத்தில்தான் நமது மக்களின் பழைய வாழ்க்கை குறித்து சிந்திக்க வேண்டி உள்ளது.பழையகால அடுப்பங்கரையில்,முதன்மை அடுப்புக்கும் பக்கத்திலேயே கொடி அடுப்பு என்று ஒன்று இருக்கும். அதில் எந்த ஒரு பொருளை வைத்திருந்தாலும் சூடு குறையாமல் இருக்கும். அதிலேதான் கசாயங்களை வைத்து இருந்து சூடு குறையாமல் பார்த்துக்கொண்டனர். இப்போது அந்த முறைகள் எல்லாம் வேண்டாம். , மாறாக ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்திருந்தாலே போதும் 12-14 மணிநேரம் வரை சூடு தாங்கும்.
மேலும் விறகு அடுப்பு எல்லாம் காணாமல் போய்விட்ட இந்த காலத்தில், கசாயம் காய்ச்சுவதற்கு எரிவாயு(Gas) அடுப்பை விட மின்னடுப்பே (Induction Stove) சிறப்பாக உள்ளது.
நாம் தேர்வு செய்கிற குடிநீர்ப் பொடியில் அனைத்து மூலப்பொருட்களும் இருக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு முறை கசாயம் போடும்போதும் குறைந்தது 1 பலம் (35கி) பொடியாவது போட வேண்டும். அந்த ஒரு பலம் பொடியை, எத்தனை சரக்குகள் கூறப்பட்டுள்ளதோ அந்த எண்ணிக்கையில் பங்கிட்டு அத்தனை எடையளவு எடுத்து கலந்துப் போட்டால் அனைத்து மூலப் பொருட்களும் அந்த கலவையில் இருக்கும்.
எடுத்துக்காட்டாக கபசுரக் குடிநீரில் 15 மூலிகை சரக்குகள் கூறப்பட்டுள்ளன. ஒரு பலம் (35 கிராமில்) கபசுரக் குடிநீரில் அனைத்து 15 பொருட்களும் சம அளவில் இருக்க வேண்டுமெனில் (35/15 = 2.33) ஒவ்வொரு மூலப் பொருளையும் வகைக்கு 2.5 கிராம் எடுத்து ஒரு பொதியாகப் போட்டு வழங்கினால் மொத்த கசாயப் பொடியில் (35 கிராமில்) அனைத்து மூலப்பொருட்களும் சம அளவில் உறுதியாக இருக்கும்.
எனது தயாரிப்பு அனுபவத்தில், மேற்கண்ட முறையிலே குடிநீர்ப் பொடிகளை தயாரித்து நோயர்களுக்கு வழங்கி நோயர்களின் நோய்க்குறிகுணங்கள் வேகமாக மாறுவதை கண்டிருக்கிறேன்.
எனது 30 ஆண்டு மருத்துவமனை அனுபவத்தில் சிறுபீளை சமூலக் குடிநீர், கல்லடைப்பு நோயர்களுக்கும், சிறுநீரகம் பழுதடைந்த நோயர்களுக்கும் நல்ல பலனைத் தந்து வருகிறது. இந்த குடிநீரை மட்டுமே தொடர்ந்து குடித்து, டயாலிசிஸ் இல்லாமல் பல நோயர்கள் நல்ல உடல்நலத்துடன் இருந்து வருகின்றனர்.
50 கிராம் மருந்துப் பொதிகளாகப் போட்டு கொடுத்து வருகிறேன். ஒரு பொதி மருந்து பொடியுடன் (50 கிராம்) 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து 1/2 லிட்டராக வற்ற வைத்து வடிகட்டி ப்ளாஸ்க்கில் வைத்துக்கொண்டு, 1/2 - 3/4 டம்ளராக ஒரே நாளில் 3 முதல் 4 முறை குடித்து வர சிறுநீரகக் கல்லடைப்பு வலி, பித்தப்பைக் கல்லடைப்பு வலி விரைவில் மாறுகிறது. சிறுநீரகக்கற்கள் கரைந்து விரைவில் வெளியேறுகின்றன. 30-45 நாட்களில் நல்ல மாற்றம் கிடைக்கிறது. பித்தப்பைக் கல்லடைப்பில் நாளைக்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நாள் குறிப்பிடப்பட்ட நோயர்களில் இரண்டு, மூன்று நாட்களில் வலி குறைந்து விடுகிறது. தொடர்ந்து ஒரு மண்டலம் குடித்துவர வலி முற்றிலுமாக நீங்கி விடுகிறது. அவர்களிடம் எப்போதும் 5 பொதிகள் வைத்து கொண்டு இருக்கச் சொல்லி அறிவுறுத்தி விடுவேன். எப்போதாகிலும் வலி வந்தால், 5 நாட்களுக்கு கசாயம் போட்டுக் குடிக்கச் சொல்லி விடுவேன் நோய் அறிகுறிகளும் இல்லாமலும் இக்குடிநீர் குடிப்பவர்கள் நலமுடன் வாழ்கிறார்கள்.
சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையில் கட்டி (cyst) உள் ளவர்களுக்கும் இந்தக் குடிநீர் நல்ல குணத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக வலியுடன் வரும் கார்ட்டிக்கல் சிஸ்ட் (Cortical cyst) நோயர்களுக்கு வலியை குறைத்து நல்ல பலனைத் தருகிறது.
இவ்வாறாக கல்லடைப்பு நோய்க்குக் கூறப்பட்ட ஒரு குடிநீர் மருந்து சிறுநீரகத்தில் ஏற்படும் பல்வேறு நோய்நிலைகளைக் குறைத்து குணமாக்கப் பயன்படுகிறது. ( நூல் ஆதாரம் - குணப்பாடம் மூலிகை - பீளைக்குடிநீர்)
உலகத் தமிழ் மருத்துவக் கழக வெளியீடான கற்ப அவிழ்தம் சித்த மருத்துவ மாத இதழில் வெளியான கட்டுரை .
கட்டுரையாளர் :
சித்த மருத்துவர் பி மைக்கேல் செயராசு பி.எஸ்.எம். எஸ் .,
நிறுவனர் ,தலைவர்
உலகத் தமிழ் மருத்துவக் கழகம்