07/03/2026
*சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்*( *விடுதலை*) *உலக மகளிர் தினம்* (*சர்வதேச பெண்கள் நாள் *)
எதிர் பாராத பல புரட்சிகளை இந்த உலகம் சந்தித்து இருக்கின்றது.1759 ஆம் ஆண்டு, ஐரோப்பியக் கண்டத்தையே அச்சுறுத்திய பிரெஞ்சுப் புரட்சியின்போது, லூயி மன்னன் மாளிகையைச் சுற்றி எட்டாயிரம் பெண்கள் கையில் ஆயுதங்களோடு இருந்தார்கள்.
1889 ஆம் ஆண்டு, கிளாரா ஜெட்கின் என்கிற வீராங்கனை, ‘அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும்’ என்று உரிமைக்குரல் எழுப்பினார். 1907 ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற உலக சோஷியலிச மாநாட்டில், உலக மகளிர் அமைப்பின் செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், ‘எங்களுக்குத் தொழிற்சங்க உரிமை வேண்டும்; பணிபுரிகின்ற இடங்களில் சமநீதி கிடைக்க வேண்டும்’ என்று ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்து வந்தார்கள். அவர்கள் வெற்றி பெற்றதை வாழ்த்திப் பாராட்டி, மூன்று ஆண்டுகள் கழித்து, ‘இனிமேல் இந்த நாள்தான் உலக மகளிர் நாள்’ என்று கிளாரா ஜெட்கின் அறிவித்தார்.
சோவியத் புரட்சியின்போது, ஆரோரா கப்பலில் பீரங்கிகள் வெடித்தபோது, 1917 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் நாள், பெட்ரோகாம் நகரில் எட்டாயிரம் பெண்கள் அணிவகுத்து வந்தார்கள். உரிமை வேண்டும்; ஒடுக்குமுறையை எதிர்ப்போம் என்று முழங்கினார்கள். அவர்கள் உயர்த்திய உரிமைப் பதாகை, சோவியத் புரட்சிக்கு நுழைவாயில் ஆயிற்று.
ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில், கையில் சிலம்போடு மன்னனின் அவையில் கண்ணகி நிகழ்த்திய மாபெரும் புரட்சியைச் சிலப்பதிகாரம் எடுத்து இயம்புகின்றது. மணிமேகலை அமுத சுரபியை ஏந்தி அமுது படைத்தாள். அரசனுக்கு அறிவுரை கூறிய மகளிர் வாழ்ந்தனர். அள்ளுர் நன்முல்லையார், ஆதி மந்தியார், ஊண் பித்தையார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், காவற் பெண்டு, காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், காமக்கணிப் பசலையார், குறமகள் இளவெயினி, நக்கண்ணையார், நெட்டிமையார், பாரி மகளிர், பொன் முடியார், மாறோக்கத்து நப்பசலையார், முடத்தாமக் கண்ணியார், வெள்ளி வீதியார் என எண்ணற்ற பெண் பாற்புலவர்கள் பாடிய பாடல்கள், சங்க இலக்கியத்தில் இடம் பெற்று இருக்கின்றன. உலகில் வேறு எந்த இலக்கியத்திலும் பார்க்க முடியாத மாபெரும் சமுதாயப் புரட்சி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மண்ணில் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது.
இந்தியத் துணைக்கண்டத்தில், வடபுலத்தில், ‘தாய், தங்கை இவர்களோடு கூட ஓர் ஆண் தனியாக உட்காரக் கூடாது; மாதர்கள் விபசார தோஷம் உடையவர்கள்; மாதர்கள் சிருங்கார சேஷ்டைகளால் மக்களைக் கெடுப்பவர்கள்; மாதர்கள் கற்பு நிலை இல்லாதவர்கள்; மனத்திண்மை இல்லாதவர்கள்; நிலையான புத்தி இல்லாதவர்கள்’ என்று, மநுஸ்மிருதிகளும், வேதங்களும் புகட்டிய கருத்துகளை கோடிக்கணக்கான மக்கள் நெஞ்சத்தில் விதைத்தன. அந்தக் கருத்துகள் தமிழகத்திலும் ஊடுருவின.
அந்தக் கொடுமைகளை எதிர்த்து, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தந்தை பெரியார் போர்க்குரல் எழுப்பினார். பெண் விடுதலையை வலியுறுத்தினார்; விதவைத் திருமணங்களை ஆதரித்தார்; பேரறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் தந்தார்; டாக்டர் கலைஞர், பெண்களுக்குச் சொத்து உரிமை வழங்கினார். மகளிர் கல்வியில், இந்தியாவில் முன்னோடியாகத் தமிழகம் திகழ்கின்றது.
நாளும் நாளும் எத்தனையோ சாதனைகளைப் படைத்து வருகின்றார்கள். அவர்களுக்கு மென்மேலும் ஊக்கள் அளிக்கின்ற வகையில், மார்ச் 8 உலக மகளிர் நாள் கொண்டாட்டங்கள் அமையட்டும் என வாழ்த்துகிறேன்.
இவன்
*முனைவர் செல்ல செல்வகுமார்
மேனாள் உறுப்பினர் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்.
மாநில பொதுச்செயலாளர்
TRLMCTU & ILU-TN
மாநில பொதுச்செயலாளர் சமகல்வி இயக்கம்-தமிழ் நாடு.