12/05/2026
கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகே உள்ள “717” மதுபான கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள்!
மது மற்றும் போதை பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை:
நடந்து முடிந்த 17வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கும், அதன் தலைவர் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
சட்ட பஞ்சாயத்து இயக்கம் 2016 ஆம் ஆண்டு மது விலக்கு ஆண்டாக அறிவித்து பல அற வழி போராட்டங்களை கையில் எடுத்தது. ஆனால், இதுவரை படிப்படியாக மது விலக்கு கொண்டு வரும் முயற்சியை பெரிதாக முந்தைய ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. குறிப்பாக பெண்கள் படும் இன்னல்களும், இளைஞர்களும் தவறான பாதைக்கு செல்லும் பழக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஆட்சி வந்த முதல் நாட்களிலேயே போதை பொருளை கட்டுப்படுத்த தனிப்படை அலகுகள் மற்றும் கோவில்,பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு அருகே அமைந்துள்ள “717” மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட உத்தரவிட்டதின் மூலம், மது மற்றும் போதைப்பொருளால் மக்கள் படும் பாட்டை அறிந்து, கட்டுப்படுத்த, புதிதாக பொறுப்பேற்ற அரசாங்கம் எடுத்த நல்ல முயற்சியை சட்ட பஞ்சாயத்து இயக்கம் முழு மனதோடு வரவேற்கிறது. இத்துடன் நிற்காமல், மேலும் மதுக்கடைகளை மூடவும் மற்றும் மாற்று பொருளாதார வலிமையை உருவாக்க தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
2024-25 நிதியாண்டின் படி தமிழ்நாடு அரசாங்கத்திற்கு மதிப்பு கூட்டு வரி(VAT) மற்றும் கலால் வரி(excise duty) வாயிலாக 48,344 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. அதில் குறைந்தபட்சம் ஒரு சதவீதமான 480 கோடி ரூபாய் ஒதுக்கி போதை மறுவாழ்வு மையம் புதிதாக ஏற்படுத்திடவும், பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மேலும், வெளிப்படையான நிர்வாகம் என்பது நல்ல அரசாங்கத்தின் அணிகலன். அதற்கேற்ப, திரு. விஜய் அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிடவும், வெளிப்படையான, ஊழலற்ற அரசாங்கம் அமைப்பேன் என உறுதி அளித்து இருக்கிறார். இந்த நல்ல சமிக்ஞையை, சட்ட பஞ்சாயத்து இயக்கம் முழு மனதோடு வரவேற்கிறோம்.
அதை எடுத்து காட்டும் விதமாக, அடுத்தடுத்த செயல்பாடுகளாக,
லோக் ஆயுக்த சட்ட திருத்தம்,
சேவை உரிமை சட்டம் அமல்படுத்த,
தகவல் அறியும் சட்டம் சிறப்பாக செயல்பட,
உள்ளாட்சிகளுக்கு அதிகார பகிர்வு கொடுத்திட ,
அரசியல் தலையீடு இல்லாமால் லஞ்ச ஒழிப்பு துறை இயங்க,
அரசு அதிகாரிகளை கண்காணிக்க திடமான உத்தரவுகளை இட வேண்டும் என இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நல்ல அரசாங்கம் செயல்பட ஆரம்ப நாள்களே மிக முக்கியமானது. ஆகையால், நல்லாட்சி கொடுத்திட மேலே குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகள் எடுக்க விரைந்து முடிவு எடுத்து, நடைமுறைப்படுத்திட சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டு கொள்வதோடு, திரு. C.ஜோசப் விஜய் அவர்களுக்கும் வெற்றி பெற்ற அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிலைப்பாட்டை பொதுமக்களாகிய நீங்கள் ஆதரிக்கும் பட்சத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்துடன் இணைந்து பயணிக்க அழைக்கிறோம்.(87545 - 80269 )
நீங்கள் இந்த நிலைப்பாட்டிற்கு missed call (7667 -100 -100 ) கொடுத்தும் ஆதரிக்கலாம்!