16/03/2026
தர்மபுரியில், உள்ளாட்சித் தேர்தலில் களம் காண ஆர்வமுள்ளோருக்கான இரண்டு நாள் பயிற்சி
கிராம சபை முதல் உள்ளாட்சிக்கான தன்னாட்சி வரை விரிவாகப் பேசப்பட்ட பயிற்சிப் பட்டறை!
--
கடந்த 14.03.2026 மற்றும் 15.03.2026 ஆகிய இரு நாள்களில் உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாகக் களம் காண ஆர்வமாக இருக்கும் பலரைச் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தர்மபுரியில் 'கிராம விழிகள் அறக்கட்டளை' ஒருங்கிணைத்திருந்த இப்பயிற்சியில். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து உள்ளாட்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஆர்வமுள்ள 50 பேர் கலந்து கொண்டார்கள்.
'ஏன் வேண்டும் வலுவான உள்ளாட்சிகள்?' என்ற தலைப்பிலான துவக்க உரையாடல் பயிற்சியின் நோக்கத்தினை, நம் பயணத்தின் இலக்கினை ஆழமாக உணர்ந்து கொள்ள உதவியாக இருந்தது.
இரண்டு நாள் பயிற்சியில் விரிவாக ஊராட்சி சட்டம், ஊராட்சியின் பொது நிர்வாகம், ஊராட்சி பொது நிலங்கள் உள்ளிட்டவை குறித்தும் குறிப்பாக நடைமுறையில் எவ்வாறு நிர்வாகம் செயல்படுகிறது, சவால்களை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் பேசினோம். இவை அனைத்தும் குழு செயல்பாடாகவும் பங்கேற்பாளர்கள் கருத்து பகிர்வாகவும் ஒருங்கிணைந்து சென்றது.
அரங்கூர் முன்னாள் ஊராட்சி தலைவர் திரு.ராஜா விரிவாகத் தனது தேர்தல் அனுபவம் பற்றிப் பேசினார். மேலும் அவர் ஐந்தாண்டுக் கால நிர்வாக அனுபவத்திலிருந்து மக்களை/கட்சி பிரதிநிதிகளை/அலுவலர்களை எப்படி அணுகுவது எனப் பகிர்ந்து கொண்ட செய்தி பலருக்கு மிகவும் உதவியாக இருந்தது.
சேலம் மாவட்டம், காரிப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் திரு.மனோ சூர்யா, திட்டங்கள் நடைமுறையும் அதில் உள்ள சவால்கள் பற்றியும் பேசினார்.
அரங்கூர் பாலர் சபை, பாலர் பஞ்சாயத்துத் தேர்தல் ஆகியவை குறித்து அதன் பொறுப்பாளர்கள் நேரடியாக வந்திருந்து விரிவாக விளக்கிப் பேசியது, பலருக்கு ஜனநாயகத்தில் குழந்தைகளின் குரல்கள் எவ்வாறெல்லாம் வெளிக் கொண்டு வர வேண்டி உள்ளது என்பதை உணர்த்தியதாகத் தெரிவித்தார்கள்
தர்மபுரியை அடுத்த வெள்ளக்கல் பகுதியில் அமைந்திருந்த இயற்கை பண்ணையில், நல்லதொரு சூழலில் இந்த இரண்டு நாட்கள் பயிற்சியைக் கிராம வழிகள் அறக்கட்டளை சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தது.
தன்னாட்சியின் சார்பாக துணைத்தலைவர் நந்தகுமார் மற்றும் அரங்கூர் ராஜா ஆகியோர் பயிற்சியை வழிநடத்தினர்.
வெறும் செய்திகளைச் சொல்லும் பயிற்சியாக இல்லாமல் கள அனுபவப் பகிர்வையும், தொடர் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பிற்கான வாய்ப்பினையும் இந்த சந்திப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணர முடிந்தது.
பங்கேற்பாளர்கள் அவரவர் பகுதிகளில் செயல்படவும் மாற்றங்களைக் கொண்டு வரவும் உறுதியோடு விடைபெற்றுச் சென்றது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.