16/05/2026
#அபாபீல்_பறவை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் நடந்த அற்புத வரலாற்றை இங்கே இறைவன் குறிப்பிடுகிறான். உலகில் முதன் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட ஆலயம் கஃபாவாகும். அதனைத் தகர்க்கும் எண்ணத்துடன் புறப்பட்டு வந்த யானைப் படையினரை இறைவன் அழித்தொழித்த இந்த வரலாற்றை அறியாத முஸ்லிம்கள் இருக்க முடியாது.
அவர்கள் அந்த வரலாற்றை மட்டும் அறிந்தார்களே தவிர புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரியவில்லை. இல்லையென்றால் இந்தியாவில் ஒரு இறையில்லம் மதவெறி பிடித்த ரவுடிக் கும்பலால் தரைமட்டமாக்கப்படும் போதும் இவர்கள் அபாபீல் பறவைகளைத் தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
அபாபீல் பறவைகளை அனுப்பி தனது ஆலயத்தை இறைவன் காத்தது உண்மை. இதில் எள்ளளவும் ஐயமில்லை. உலகில் இருக்கும் எல்லாப் பள்ளிவாசல்களையும் காக்க அபாபீல் பறவைகள் வந்து விடும் என்பது இதன் அர்த்தமா? உலகில் எந்தப் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட முடியாது என்று இந்த அத்தியாயம் உத்திரவாதம் தருகின்றதா? முஸ்லிம்கள் இதற்காக எந்தத் தியாகமும் செய்யத் தேவையில்லை என்பது தான் இதன் பொருளா? இல்லை! நிச்சயமாக இல்லை!
கஃபா எனும் ஆலயத்திற்கு மட்டும் இறைவன் வழங்கிய பிரத்தியோகமான சலுகையே இது. முஸ்லிம்கள் முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிவாயில்கள் அனைத்தும் இறைவனது இல்லங்கள்தான் என்றாலும் கஃபாவுக்கு என்று விசேஷமான தகுதிகள் உள்ளன.
முஸ்லிம்கள் தொழும் திசையாகவும், இணைவைப்பவர்கள் அனுமதிக்கப்படாத புனிதத் தலமாகவும், போர் செய்வது விலக்கப்பட்ட இடமாகவும், தவாப் எனும் பிரத்தியோகமான வணக்கம் நடைபெறும் ஆலயமாகவும், உலக முஸ்லிம்கள் குழுமி ஹஜ் எனும் வணக்கம் புரியும் தளமாகவும் அது அமைந்துள்ளது. கஃபாவுக்கு என்று சிப்புத் தகுதிகள் உள்ளன என்பதற்கு இவை சான்றுகள்.
மேலும் கஃபாவை அபய பூமியாகவும் இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.
“புனிதமான ஆலயமான கஅபாவையும் மனிதர்களுக்கு நிலையானதாகவும் அல்லாஹ் ஆக்கிவிட்டான்”
(அல்குர்ஆன் 5:97)
“இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?”
(அல்குர்ஆன் 29:67)
“அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்கு வசிப்படமாக நாம் ஆக்கவில்லையா?”
(அல்குர்ஆன் 28:57)
இந்த வசனங்கள் யாவும் கஃபா ஆலயத்துக்கு இறைவன் தனி உத்திரவாதம் வழங்கியிருப்பதைக் குறிப்பிடுகின்றன. ஆரம்பம் முதலே அந்த ஆலயத்தை மானிடாரின் அபய பூமியாகவும், பாதுகாக்கப்பட்ட புனிதத் தளமாகவும் இறைவன் ஏற்படுத்தியுள்ள காரணத்தினால் அதைக் காக்கும் பொறுப்பை நேரடியாக அவன் ஏற்றுக் கொண்டான்.
உலகில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தையும் காக்க அவன் அபாபீல் பறவைகளை அனுப்பி வைப்பான் என்பது இதன் அர்த்தமில்லை.
இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். கஃபாவை அழிக்க யானைப் படையினர் வந்தபோது கஃபா ஒரே இறைவனை மட்டும் வணங்கும் தூய வழிபாட்டுத் தலமாக இருக்கவில்லை.
இறைவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் ஏராளமான கற்சிலைகள் அங்கே நிறுத்தப்பட்டிருந்தன. அவை கடவுள்களாக நம்பப்பட்டு வணங்கப்பட்டு வந்தன. ஏக இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயமாக அது இருந்தும் மாசுபடுத்தப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் அதை இறைவன் பாதுகாத்தான்.
அல்லாஹ்வின் இல்லமாக இருக்க வேண்டிய விதத்தில் அது இல்லாமலிருந்தும் அதை இறைவன் பாதுகாத்தது “அந்த இடம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட புனித பூமி” என்பதைக் காட்டுகின்றது. அதில் எவ்வளவு மோசமான காரியங்கள் நிகழ்ந்த போதும் அவன் அதை அழிந்து போக விட மாட்டான். இதைத்தான் அந்த 105- ஆவது அத்தியாயம் விளக்குகின்றது.
அப்படியானால் மற்ற பள்ளிவாசல்களின் நிலை? அதற்கு எந்த உத்திரவாதத்தையும் இறைவன் வழங்கவில்லை. மனிதர்கள்தான் அதைக் காக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் எனத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.
மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப் பட்டிருக்கும்.
(அல்குர்ஆன் 22:40)