18/06/2026
18.06.20206
முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும் உறுதி தேவை!
ஆளுநர் உரை குறித்து தமிழ்நாடு ஏஐடியூசி அறிக்கை
இது குறித்து தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச்செயலாளர் ம. இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு ஈர்ப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதிய தொழில் கொள்கை குறித்த பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், தொழில் மற்றும் வணிகம் மேலும் எளிமையாக்கப்படும் (Ease of Doing Business) என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கும் தொழில் வளர்ச்சி அவசியமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தொழில் வளர்ச்சி என்பது முதலீட்டாளர்களின் நலன்களை மட்டும் மையப்படுத்தியதாக இருக்க முடியாது.
தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும், சேவைத் துறைகளையும் இயக்கும் உழைக்கும் மக்களின் உழைப்பே அந்த வளர்ச்சியின் அடித்தளமாகும். எனவே தொழில் வளர்ச்சியுடன் தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பும் இணைந்து முன்னேற வேண்டும். ஆனால் ஆளுநர் உரையில் தொழிலாளர் நலன், மற்றும் தொழிற்சங்க உரிமைகள் குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தொழிலாளர் இயக்கங்கள் நாடு முழுவதும் கடுமையாக எதிர்த்து வரும் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகள் (Labour Codes) குறித்தும் ஆளுநர் உரை முழுமையான அமைதியை கடைப்பிடித்துள்ளது. எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை, வேலைப் பாதுகாப்பு, தொழில் தகராறு தீர்வு நடைமுறைகள், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட தொழிலாளர் வர்க்கம் பல தலைமுறைகளாக போராடி வென்ற உரிமைகளை பலவீனப்படுத்தும் அபாயம் கொண்ட இந்த சட்டத் தொகுப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது அவசியமாகும்.
இன்று “Ease of Doing Business” என்ற பெயரில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் “Ease of Living for Workers” – அதாவது தொழிலாளர்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான சூழல் – அதே அளவு முக்கியத்துவம் பெற வேண்டும்.
கடந்த காலங்களில் முதலீட்டு ஈர்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட போதிலும், தொழிலாளர் நலன் மற்றும் தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டன. அதன் விளைவாக வருமான மற்றும் சொத்து அசமத்துவம் அதிகரித்ததோடு, நிரந்தர வேலைவாய்ப்புகள் குறைந்து, ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் வேலைமுறைகள் விரிவடைந்தன. பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் சமமாக பகிர்ந்தளிக்கப்படாதபோது அது சமூக அதிருப்தியையும் அரசியல் விளைவுகளையும் உருவாக்கும் என்பதை சமீபத்திய அரசியல் மாற்றங்கள் மீண்டும் உணர்த்தியுள்ளன.
அசமத்துவத்தை குறைத்து, தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்து, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தற்போதைய அரசின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த முக்கிய காரணிகளில் ஒன்றாகும் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் வெறும் தேர்தல் முழக்கங்கள் அல்ல; அவை மக்களிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளாகும். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
தொழில் கொள்கை எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு தொழிலாளர் கொள்கையும் அவசியமானது. முதலீட்டு இலக்குகளை நிர்ணயிக்கும் அரசு, தொழிலாளர் நல இலக்குகளையும் நிர்ணயிக்க வேண்டும். வேலைவாய்ப்பின் தரம், ஊதிய உயர்வு, சமூகப் பாதுகாப்பு, பெண்களின் வேலைவாய்ப்பு, அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய விரிவான தொழிலாளர் கொள்கையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக உறுதிமொழிகளை வழங்கும் மாண்புமிகு முதல்வர், அதேபோன்று தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் நேரடியாக சந்தித்து தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை பாதுகாக்க அரசு உறுதியுடன் செயல்படும் என்பதை அறிவிக்க வேண்டும். தொழில் அமைதி என்பது தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் இன்றி சாத்தியமல்ல.
மேலும், தொழிலாளர் நலன் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முத்தரப்பு அமைப்பான மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் (State Labour Advisory Board) கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டப்படாமல் இருப்பது மிகுந்த கவலைக்குரியது. தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் தொழில் உறவுகள் தொடர்பான விவகாரங்களில் அரசு, முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களை ஒருங்கிணைக்கும் முக்கிய ஜனநாயக அமைப்பான இந்த வாரியத்தை உடனடியாக கூட்டி, தொழிற்சங்கங்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டு, அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று, முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில் முதலீட்டு மாநாடுகள் நடத்தப்படுவது போல, தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம், ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பின் தரம் தொடர்பாக விவாதிக்க மாநில அளவிலான “தொழிலாளர் நலன் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மாநாடு” ஒன்றை
தமிழக அரசு கூட்ட வேண்டும். அந்த மாநாட்டில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், துறைவாரியான தொழிற்சங்கங்களும், அமைப்புசாரா தொழிலாளர் அமைப்புகளும், பெண்தொழிலாளர் பிரதிநிதிகளும், தொழிலாளர் நல நிபுணர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை உருவாக்குவது முதலீடுகள் மட்டுமல்ல; உழைக்கும் மக்களின் வியர்வையும் உழைப்பும்தான். எனவே பொருளாதார வளர்ச்சியும் சமூகநீதியும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதை அரசு உணர வேண்டும். தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும் போதுதான் வளர்ச்சி நிலையானதாகவும் சமத்துவமானதாகவும் அமையும். “Ease of Doing Business” உடன் சேர்த்து “Ease of Living for Workers” என்பதையும் அரசின் அடிப்படைக் கொள்கையாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த திசையில் தொழிலாளர் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான வளர்ச்சியை மையப்படுத்திய கொள்கைகளை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியூசி வலியுறுத்துகிறது.