21/08/2026
ஒன்றிய, மாநில அரசுகளின்
தொழிலாளர், விவசாயி, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக
தொழிலாளர்,விவசாயிகள் சங்கங்கள்
செப்டம்பர் 6-12 வரை பரப்புரை வாரம்
20.08.2026
தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டம் 2026 ஆகஸ்ட் 20 அன்று சென்னையில் பல்லவன் இல்லம், விரைவு போக்குவரத்து கழக தொமுச அலுவலகத்தில் எச்எம்எஸ் தேசிய தலைவர் தோழர் க.அ.ராஜா ஸ்ரீதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தோழர்கள், கி.நடராசன், வி.வேலுசாமி, என்.தனசேகரன், பி.பன்னெர்செல்வம், ஜெ.விஜயகுமார், கி.சீனிவாசன், எம்.சண்முகம், எல்.பன்னீர்செல்வம், வி.மகேந்திரன், எஸ்.சுந்தரமூர்த்தி (தொமுச), ம.இராதாகிருஷ்ணன், (ஏஐடியுசி) கே.சி. கோபி குமார், எஸ்.ரேஜேந்திரன், (சிஐடியு) மு.சுப்ரமணியன், எம்.சுப்பிரமணிய பிள்ளை, பி.மோகந்தாஸ், எச்.கார்த்திக் (எச்எம்எஸ்) பி.சுகுமாறன் (ஐஎன்டியுசி) வி.சிவக்குமார், ஈ.சடையாண்டி (எஐயூடியூசி) சொ.இரணியப்பன், ஜி.முனுசாமி (ஏஐசிசிடியு) அ.சேக்கிழார் (யுடியுசி) எஸ்.மாயாண்டி (டியுசிசி), இரா. அந்திரிதாஸ், (எம்எல்எப்) ஆர்.சம்பத் (டபுள்யுபிடியுசி), க.பேரறிவாளன் (எல்எல்எஃப்) ஆகியோர் தொழிற்சங்கங்களின் சார்பிலும், கே.பாலகிருஷ்ணன் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பிலும் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 10 அன்று மறியல் போராட்டத்தை எழுச்சிகரமான போராட்டமாக நடத்திட்ட அனைத்து தொழிற்சங்க, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட நிர்வாகிகளுக்கும், உற்சாகத்துடன் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், விவசாயிகளுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் வருமாறு:
அடுத்த கட்டமாக தொழிலாளர்கள்–விவசாயிகள் கூட்டு மாநாடுகள், பலநாள் பெருந்திரள் அமர்வு (Mahapadav), பலநாள் நேரடி நடவடிக்கைகளுக்கான தேதி, காலம் குறித்து அகில இந்திய தலைமையில் இருந்து அறிவிக்கப்படும் போது நாம் வெற்றிகரமாக நடத்துவதற்கு தயாராக வேண்டும்.
2026 செப்டம்பர் 6-12 வரை பரப்புரை வாரம்:
நமது தொடர் போராட்டத்தின் முன் தயாரிப்பாக 2026 செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை உள்ள ஒரு வார காலத்தில் தொழிலாளர், விவசாயிகள் மாநாட்டின் கோரிக்கைகளோடு கீழ்க்கண்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகளையும் இணைத்து தொழிற்சங்கங்களும், விவசாயிகள் சங்கங்களும் ஒன்றிணைந்து நகரங்களிலும், கிராமங்களிலும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். ஆலை வாயில், தெருமுனை கூட்டங்கள், நடைபயணம்/இருசக்கர வாகன பரப்புரை உள்ளிட்ட சாத்தியமுள்ள வடிவங்களில் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கும் குறையாத நாட்கள் இந்த பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு கோரிக்கைகள்:
ஒன்றிய அரசே!
1. காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட, தமிழ்நாட்டின் பங்கை தர நடவடிக்கை எடு,
2. மேக தாது அணை கட்டுமானத்திற்கு ஒன்றிய அரசே அனுமதிக்காதே
தமிழ்நாடு அரசே!
1.ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்று
2.முடங்கியுள்ள முத்தரப்பு குழுக்களை விரைந்து அமைத்து செயல்படுத்து
3.ஒன்றிய அரசின் வழியில் பொதுத்துறை, பொது சேவைகளை தனியார்மயமாக்கும் அபாயகரமான கொள்கைகளை கைவிடு
4.போராடும் மின்சாரம், போக்குவரத்து, டாஸ்மாக், சிவில் சப்ளை, உள்ளாட்சி, மருத்துவம், திட்டப்பணியாளர் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்த முறையை கைவிட்டு தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிக்கைகள் மீது தீர்வுகாண்,
5.கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்
6.குறைந்தபட்ச ஊதிய அரசாணைகளை மறுவரையறை செய்து ரூ. 42,000 க்கு குறையாமல் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயித்து அமுலாக்கு
7.கட்டுமானம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் ஒன்றிய அரசின் சட்டத்தால் முடங்கும் நிலையை தடுத்திடு
8.காவிரி நதி நீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, மேக தாது அணை கட்டுமானத்தை தடுக்க உரிய சட்ட போராட்டத்தின் மூலம் நடவடிக்கை எடு
9.விவசாய தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு உரிமையை பறிக்கும் விஜி-கிராம் ஜி திட்டத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசே விவசாய தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு 150 நாட்கள் வேலை வழங்கத் தக்க முழுமையான நிதி ஒதுக்கி, வேலைவழங்குவதை உறுதிசெய்
10. போராடும் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் அடக்குமுறைகளை கைவிடு
மாவட்டங்களில் தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டு கூட்டங்கள் கூட்டி பரவலாக பல்வேறு மையங்களில் திட்டமிட்டு மேற்கண்ட கோரிக்கைகளையும் இணைத்து பரப்புரை நடத்தவும் நடந்த விவரங்களை மாநில தலைமைக்கு தெரிவிக்கவும் வேண்டுகிறோம்.
தோழமைமிக்க,
LPF HMS AITUC CITU INTUC AIUTUC AICCTU UTUC WPTUC TUCC MLF LLF &
ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM)