19/03/2026
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள்! அதிகரிக்கும் அச்சுறுத்தல்!
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை எளிமையாக்கியுள்ளது, அதே நேரத்தில் புதிய வகை குற்றங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பெண்களை குறிவைத்து நடைபெறும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்கிடமான ஒன்று.
மார்ச் 19, 2026, நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி பண்டி சஞ்சய்குமார் அளித்த செய்தி தகவலின்படி, பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டு 48335 ஆக இருந்த சைபர் குற்றங்கள் 28322 குற்றப்பதிவுகள் அதிகரித்து 2025 ஆம் ஆண்டு 76657 ஆக உயர்ந்துள்ளது.
பாலியல் ரீதியான ஆபாச செய்திகள் வெளியீடு, இணையவழி பின்தொடர்தல், போலி சுயவிவரங்கள் மற்றும் ஆள்மாறாட்டம், அடையாளத் திருட்டு, மெசேஜிங் பயன்பாடுகள், ஆன்லைன் தளங்கள் வழியாக பெண்களை தொந்தரவு செய்தல், ஈமெயில் ஃபிஷிங், மிரட்டல், தனியுரிமை மீறல், போலி கணக்குகள் உருவாக்குதல், ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் உள்ளாகின்றனர்.
இவ்வாறான குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மனநிலையையும், சமூகத்தில் அவர்களின் பாதுகாப்பு உணர்வையும் பாதிக்கின்றன.
இந்த குற்றங்கள் ஏன் அதிகரிக்கின்றன? முக்கிய காரணங்கள்:
1. டிஜிட்டல் கல்வி பற்றிய குறைபாடு.
2. ஆன்லைன் பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாமை.
3. குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனைகள் குறித்த பயம் இல்லாமை போன்றவை.
4. மேலும் பல பெண்கள் சமூக அவமானம் அல்லது குடும்ப அழுத்தம் காரணமாக புகார் அளிக்க தயங்குவது குற்றவாளிகளுக்கு ஊக்கமளிக்கிறது.
அரசு மற்றும் காவல்துறை இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. சைபர் கிரைம் பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் மற்றும் ஆன்லைன் புகார் தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
* www.cybercrime.gov.in.
* 1930 Cybercrime Helpline.
* Indian Cybercrime Coordination Centre.
* NCRP Portal.
இருந்தாலும், இது மட்டும் போதுமானதாக இல்லை.
சமூக மட்டத்திலும் மாற்றம் அவசியம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கல்வி அளிக்கப்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மட்டத்திலேயே சைபர் பாதுகாப்பு பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குடும்பங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து, புகார் அளிக்க தைரியம் அளிக்க வேண்டும். அதேசமயம், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஒரு சமூக செயற்பாட்டாளராக , இது ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, மனித உரிமை பிரச்சினை என்பதையும் வலியுறுத்துகின்றேன். பெண்கள் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தும் சூழலை உருவாக்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும்.
மௌனமாக இருப்பதால் குற்றங்கள் குறையாது. அமைதியாக இருந்தால் நாம் குற்றவாளிகளுக்கான சிறந்த தீனியாகி விடுகிறோம். சைபர் குற்றங்களை தடுக்க ஒற்றுமையாக செயல்படுவோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து உரக்க குரல் கொடுப்போம்.
கல்யாணந்தி. ச
சமூக செயற்பாட்டளர்.