01/08/2026
2026 தமிழ் மரபுத் திங்கள்
ஒரு மொழி என்பது வெறும் சொற்களின் கூட்டமல்ல; அது அந்த நிலத்தின் ஒலி. காற்றில் அசையும் மரங்கள், ஓடும் நதி, பறவைகளின் ஒலி என நிலத்தின் கூறுகளே மொழியாக உருவெடுக்கின்றன. நிலத்தோடு மக்கள் கொண்டுள்ள நீண்ட காலத் தொடர்பே அம்மொழியைச் செழுமைப்படுத்துகிறது.
மொழிதான் ஒரு இனத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லும் கருவியாகும். நிலத்திலிருந்து உருவான பண்பாடு, மொழியின் வழியாகவே கலைகளாகவும் இலக்கியங்களாகவும் வடிவம் பெறுகின்றன.
நிலம் என்பது ஒரு இனத்தின் உடல் என்றால், மொழி அதன் உயிர்; பண்பாடு அதன் ஆன்மா. நிலத்தை இழக்கும்போது நாம் ஒரு வாழ்விடத்தை மட்டும் இழப்பதில்லை, அந்த நிலத்திலிருந்து தோன்றிய தனித்துவமான மொழியையும் பண்பாட்டையும் கலைகளையும் வரலாற்றையும், ஒட்டுமொத்த இன அடையாளத்தையுமே இழக்கிறோம்.
எனவே, நிலத்தைக் காப்பது என்பது அந்த மண்ணில் முளைத்த மொழியையும், அந்த மொழியில் விளைந்த பண்பாட்டையும் காப்பதாகும். இதுவே ஒரு இனம் அழிந்துவிடாமல் இருப்பதற்கான ஒரே வழி.