06/03/2026
சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீமுதீன் முன்வைத்த கல்முனை தொகுதி அபிவிருத்தி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்து, ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஏ.ஆர் மன்சூர் பௌண்டேசன் மற்றும் லைட் போ லேர்னிங் (light for learning) அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீமுதீன் அவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த கோரிக்கையை கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு , தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு, ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் திரு. சி.ஏ.கே. பரணமன அவர்களால் 2026.02.18 அன்று கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், கல்முனை தொகுதி அபிவிருத்தி மற்றும் கிழக்கு மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்களை ஆராய்ந்து, அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இதில் கல்முனை தொகுதி நீண்ட காலமாக எதிர்நோக்கும் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகள், கிழக்கு மாகாண கடலரிப்பு அபாயம் , பெண்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த எதிர்கால திட்டங்கள்,சுனாமி வீட்டுத்திட்டம் சார்ந்த முழுமை பெறா அபிவிருத்தி, வைத்தியசாலைகளின் தரமுயர்த்தல் , நவீன நூலகங்களின் தேவையும் பராமரிப்பும் , சாய்ந்தமருது தோணாவின் நிலையான அபிவிருத்தி ,மாவடிப்பள்ளி பால அபிவிருத்தி,திண்ம கழிவகற்றும் முறைமையும் தீர்வும் மற்றும் தொகுதி சார்ந்த பல முழுமையான அபிவிருத்தி திட்டங்களின் தேவைகள் குறித்து சட்டத்தரணி மரியம் முன்சூர் நளீமுதீன் அவர்கள் ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைத்த கோரிக்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விசேடமாக கிழக்கு மாகாண கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கடலரிப்பு கடுமையாக அதிகரித்து வருகின்றமையினால் மக்கள் வாழ்வாதாரம் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பாதுகாப்பு அணைகள் அமைத்தல், நிலையான கடற்கரை பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார தொழில் வழிகாட்டல் மற்றும் நீண்டகால மறுவாழ்வு திட்டங்கள் ஆகியவையும் முக்கிய தேவைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.மீனவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் உட்பட பல சமூகங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். “இப்போது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் பெரும் மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடி உருவாகும்” என்ற எச்சரிக்கையும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை தொகுதி மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் அபிவிருத்தி தேவைகள் தொடர்பாக இந்நடவடிக்கை முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.