25/07/2026
*கல்முனையின் அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்தவர் ஏ.ஆர்.மன்சூர்*
*_எம்.எம்.ஏ.ஸமட்*
வீரகேசரி
25.07.2026
நன்றி- வீரகேசரி ஆசிரியர் பீடம்
(முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் ஒன்பதாவது ஆண்டு நினைவுநாள் இன்று ஜுலை 25ஆம் திகதி நினைவு கூறப்படுகிறது.
அதனையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)
கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், கப்பற்துறை, வர்த்தகம் மற்றும் வாணிப அமைச்சராகவும் தேசிய அரசியலில் பதவி வகித்து அரசியலிருந்து ஓய்வான காலம் முதல் மரணிக்கும் நேரம் வரை தான் பிறந்த மண்ணின் அபிவிருத்தி தொடர்பில் சதா சிந்தித்து வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து ஒன்பது ஆண்டுகள் கடந்தும் கல்முனை மண் இன்னும் அன்னாரை மறக்கவில்லை.
உலகம் தோற்றியது முதல் இன்று வரை கோடான கோடி மக்கள் வாழ்ந்து மறைந்து விட்டனர். அவ்வாறு மண்ணில் உதித்தவர்கள் எல்லோரும் மக்கள் மனங்களில் இடம்பிடிக்கவில்லை.
ஆனால், மறைந்த முன்னாள் அமைச்சர் மன்சூர் இன்றும் கல்முனை மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு அன்னார் மக்களுக்காகச் செய்த சேவையே காரணமெனக் கூறலாம்.
முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்ற அரசியல் பிரமுவர்களில் மறைந்த அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரும் ஒருவராவார்.
ஓர் அரசியல்வாதியின் வெற்றி அவர் வகித்த பதவிகளால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அவர் மக்களின் நினைவில் விட்டுச் சென்ற நம்பிக்கையினாலும் அளவிடப்படுகிறது.
அந்த வகையில் கல்முனை மக்களின் நலன்கள், அவர்களின் தேவைகள் குறித்து சிந்தித்து வாழ்ந்து மறைந்தவர்கள் வரிசையில் அன்னார் மகத்தானவர்.
1933ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ஆம் திகதி கல்முனை மண்ணில் பிறந்த அவர் தனது ஆரம்ப கல்வி, இடைநிலைக் கல்வி என்பவற்றை பிரதேச, பிராந்திய பாடசாலைகளில் கற்ற பின் உயர்கல்வியை கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கற்றார்.
1955ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கற்கை நெறியை பூர்த்தி செய்து 1958ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கல்முனையின் கலங்கரை விளக்காகத் திகழ்ந்த அன்னாரின் மாமனார் மறைந்த கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பரின் தூண்டுதலின் பெயரில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
அத்துடன், அவர் 1979ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாணத்தில் மறைந்த எம்.எச்.எம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் வரவு பெரும் சவாலாக இருந்த காலகட்டத்தில் 1989ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்று வர்த்தக வாணிப்பதுறை அமைச்சராக 1994ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
1977ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரையான அன்னாரது 17 வருட கால அரசியல் வாழ்க்கையில் கல்முனைக்கு மாத்திரிமின்றி, கிழக்கு மாகாணம் உட்பட முழு இலங்கைக்கும் அவரது சேவை சென்றடைந்தது.
இருந்தும், அன்னார் தான் பிறந்த மண்ணின் மீதான பற்றின் காரணமாக கல்முனை உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களினதும், அபிவிருத்திக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும், போக்குவரத்துக்காகவும் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுக்காகவும் தொடந்து முயன்ற அரசியல்வாதியாகவும் மக்கள் சேவகனாகவும் விளங்கினார்.
மட்டக்களப்பு வரையுள்ள ரயில் பாதையானது பொத்துவில் வரை விஸ்தரிக்கப்பட வேண்டும்.
கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட கரையோர மக்கள் பல வழிகளிலும் நன்மையடைய வேண்டும்.
அதற்காக மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரை ரயில் சேவைக்கான பாதை உருவாக்கப்பட வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அனுமதிக்கிணங்க ஈரான் இஸ்லாமியக் குடியசிக்குச் சென்று இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
அதன் பயனாக, 1993ஆம் ஆண்டு ஈரான் அரசியின் பொறியியல் நிபுணர்குழு இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்துக்கு விரைந்து, ரயில் போக்குவரத்துப் பாதையை மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை விஸ்தரிப்புச் செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான திட்ட வரைவுகளையும் பூர்த்தி செய்தனர்.
விஸ்தரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் காரணமாக இத்திட்டம் முன்நோக்கி நகர்த்தப்படாது கைவிடப்பட்டதனால் அன்னார் பெரும் கவலை கொண்டார்.
இன்று கல்முனையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற அரச கட்டடங்களில் 90 வீதமானவை அன்னாரின் அரசியல் அதிகார காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டவைகளாகும்.
இன, மத, பிரதேச வேறுபாடின்றி கல்முனை வாழ் அனைத்து இன மக்களும் பயனடையத்தக்கதான அபிவிருத்திகளை அன்னார் இக்கல்முனை மண்ணுக்குச் செய்திருக்கிறார்.
அவ்வாறு கல்முனையை அலங்கரிக்கச் செய்த அன்னாரது பெயரை அன்னாரினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனைப் பொது நூலகத்திற்கு சூட்டியபோதிலும், அன்னார் உயிரோடு இருக்கும்போதே அன்னராது பெயர்பலகை சமூக விரோதிகளினால் உடைத்து நொருக்கப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.
இருப்பினும், அபிவிருத்தியினூடாக பிரதேச சமூக ஒருமைப்பாட்டைக் கட்டிக்காத்து வாழ்ந்த அன்னாரது ஜனாஸா நல்லடக்கத்தில் அனைத்து இன மக்களும் கலந்து கொண்ட நினைவுகள், அன்னார் பிரதேசத்தின் அனைத்து இன மக்களையும் அனுசரித்து வாழ்ந்தவர் என்பதற்கு சான்றாகும்.
கல்முனைப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காக அவர் புரிந்த பங்களிப்பு அளப்பெரியதென்றே கூற வேண்டும்.
பிரதேச பாடசாலைகளில் பல்வேறு கட்டடங்களை தனது அரசியல் பதவிகளினூடாக நிர்மாணித்துக் கொடுத்தது மாத்திரமின்றி, பாடசாலைகள் தரமுயர்த்தப்படுவதற்கும் கால்கோலாக இருந்தார்.
அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமின்றி, கிழக்கு மாகாணத்திலுள்ள மாணவர்கள் இப்பிராந்திய ஆசிரியர்களினாலேயே கற்பிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் அட்டாளைச்சேனையில் ஒரு தேசிய கல்விக் கல்லூரி உருவாக வேண்டும் என்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து, அதற்கான அமைச்சரவைப் பத்திரங்களையும் சமர்பித்து ஒரு தேசிய கல்விக் கல்லூரி அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் உருவாகுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார்.
அத்துடன், அன்னார் 2003ஆம் ஆண்டு காலப்பகுதியில் குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக பதவி வகித்த வேளை, அந்நாட்டின் நிதி உதவிகளைப் பெற்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கட்டட நிர்மாணப்பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதற்கு தூண்டுகோலாக இருந்தார்.
இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு அன்னார் புரிந்த சேவைகளை கௌரவிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகம் அன்னாருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி வைத்தது.
இப்பட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார் என்பது சுட்டிக்காட்டரத்தக்கது.
அன்னார் அரசியல் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இப்பிரதேசத்தில் அபிவிருத்திகள் இடம்பெற வேணடும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டவர்.
பிரதேச அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களால் இதுவரை அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு செய்யப்படாதுள்ள மாவடி பள்ளி முதல் நட்பிட்டிமுனை வரை போக்குவரத்து நெரிசல் அற்ற விவசாயிகள் மட்டும் பிரதேச மக்களின் பயணத்திற்காக கல்முனை குளக்கட்டு வீதியை விஷ்தரிக்க அதிகாரமில்லாதபோதிலும், அவ்வீதியை அபிவிருத்தி செய்ய முயற்சித்தார்.
இவ்வீதியை புனரமைப்பதற்கான நிதியைத் தன்னால் பெற்றுத் தர முடியும் என்றும் அதற்கான திட்ட வரைவுகளை அரசியல் அதிகாரமுள்ளவர்களிடமிருந்து பெற்றுத்தருமாறு இக்கட்டுரையாளரிடம் கூறியதற்கிணங்க இக்கட்டுரையாளரினால் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கபபட்ட போதிலும், அத்திட்ட வரைவுகளை பெற முடியாமல் போனமை துரஷ்டவசமமே.
அன்னார் மறைந்து ஒன்பது வருடங்கள் கடந்தும் அரசியல் அதிகாரங்கள் இவ்வீதியை இன்றுவரை புனரமைக்கவில்லை.
கல்முனை மண்ணையும் மக்களை நேசித்து வாழ்ந்த,
கல்முனையின் அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்த மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரை வருடங்கள் பல கடந்தாலும் கல்முனை மண் மறக்காது. அன்னாரின் சேவைகள் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும்.
வல்ல இறைவன் அன்னாரின் மக்கள் சேவைகளை பொருந்தி,
பாவங்கள் அனைத்தையும் மன்னித்து,
நற் கருமங்கள் அனைத்தையும் ஏற்று ,
நாளை மறுமையில் உயர்ந்த சுவனத்தை வழங்க பிரார்த்திப்போம்!!