09/03/2024
"பசி, காமம் போல பதவி ஆசையும் மனிதனின் அடிப்படை உணர்வுகளுள்/ அடிப்படைத் தேவைகளுள் ஒன்று. அது இயல்பிலேயே மனிதனுள் புதைந்திருக்கும் விடயம். அதை ஆக்கபூர்வமாக (Construtive ஆக) கையாள வேண்டும்."
ஒருமுறை அறிஞர் ஒருவர், என்னிடம் சொன்ன கருத்துதான் இது. சிந்தித்துப் பார்த்தால் இதில் உண்மை இல்லாமல் இல்லை.
பதவியை தத்தம் ஆற்றல்களால் அலங்கரிப்பவர்கள் முதல் வகையினர். சமூக ஓட்டத்திற்கு இவர்களே அதிகம் தேவைப்படுபவர்கள். ஆனால், தகுதி வாய்ந்த பலருக்கு, இந்த வாய்ப்பு மறுக்கப்படுவதே இங்குள்ள இழிநிலை- கசப்பான யதார்த்தம்.
பதவியால் அலங்காரம் பெறுபவர்கள் இரண்டாவது வகையினர். பட்டம் பதவிக்காக அலைந்து திரிபவர்கள். சுருக்கமாகச் சொன்னால் பின்கதவு ஆசாமிகள்.
கண்ணதாசனின் பாடல்வரிகளில் வருவது போல 'பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகள்' இவர்கள்.
"கருடா சௌக்கியமா?" என்று கேட்பவர்கள். "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே. கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது" என்று அந்தப் பாடல் வரிகள் தொடரும்.
'திறமையுள்ளவன் தங்களைமிகைத்து விடக் கூடாது- முந்தி
விடக் கூடாது' என்று புழுங்கிச் சாகும் கோழைகள் இவர்கள்.
தாங்கள் தகுதியற்றவர்கள் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். அதனால், ஆற்றல் மிக்கோரைக் கண்டால் இவர்களுக்கு எரிச்சல்தான் மேலிடும். அவர்களை எங்கு எதிர்கொண்டாலும், 'வெட்டி' விட வேண்டும் என்று அலைவார்கள். அதற்காகத் துடியாய்த் துடிப்பார்கள்.
திறமையுள்ளவன் உரிய இடத்திற்கு/ உரிய பதவிக்கு வந்து விட்டால், தங்கள் இடம் பறிபோய் விடுமே என்ற கவலை சதா இவர்களை அரித்துக் கொண்டே இருக்கும். இதனால் எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வின் (Insecure feeling) பிடிக்குள் ஆட்பட்டிருப்பார்கள். இதன் காரணமாக, ஒரு அமைதியற்ற தன்மை (Restless nature) இவர்களைப் போட்டு ஆட்டும்.
ஆனால், என்னதான் ஆட்டம் போட்டாலும், இவர்கள் வீழும் காலமொன்று வரும். அப்போது மக்கள் இவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். செல்லாக் காசாகி விடுவார்கள்.
பதவியில் இருக்கும் காலத்தில், சில அற்ப சுகங்கள் இவர்களுக்கு கிடைக்கவே செய்யும். ஆனால், அப்போது கூட, புழுங்கிச் சாகும் நிலையால் நிம்மதி இழந்து தவிப்பார்கள். மறுபுறம், பதியிழக்கும் நிலை ஏற்பட்டு விட்டால் கையறு நிலைக்கு ஆளாவார்கள். கேட்பார் பார்ப்பாரின்றி அந்தரித்து நிற்பார்கள்.
ஆனால், பதவி என்பது 'பொறுப்பு' (Responsibility) மிக்கது. அது 'அனுபவிப்பதற்கானது' அல்ல. மக்களுக்குப் பணி செய்வதற்குரியது.
அது குறித்து நாம் பொறுப்புக் கூற வேண்டியவர்கள். இந்த உணர்வோடும் அர்ப்பணிப்போடும் இயங்குபவர்களால்தான், பதவிகள் 'அலங்காரம்' பெறும்.
ஒருபோதும் குறுக்கு வழிகளில் பதவிகளுக்கு அலையக் கூடாது. பொறுப்பும் பதவியும் கிடைத்தால்- நம்மைத் தேடி வந்தால், அதற்கு உண்மையிலேயயே நாம் தகுதியெனில்-அதைப் பொறுப்பேற்பதுதான் சிறந்த தெரிவு.
எப்போதும் நேர்மையாக, நியாயமாக இருப்பது அவசியம். தாமதித்தேனும் அது நன்மையைக் கொண்டு வரும்.
பெரிய பதவிகளில் இருக்கிற முட்டாள்கள் - சுயநலவாதிகள்- தகுதியற்றவர்கள் குறித்து, நாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. என்றோ ஒருநாள் அவர்கள் வீழும் நிலை வரும்.
அந்த மாற்றத்திற்காக உழைப்பதே - தொடர்ந்து செயல்படுவதே நம் பணியாக இருக்க வேண்டும்.
அதுவே மன அமைதியையும் நிம்மதியையும் ஈட்டித் தரும்.
"மாற்றம் ஒன்றே மாறாதது."
Copied from சிராஜ் மஷ்ஹூர்