21/05/2024
இலக்கியவனம் – 19.05.2024
உலகத் தமிழ் ஆர்வலர்களின் நல்லாதரவோடு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தால் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலக்கியவனம் நிகழ்ச்சி, மே மாதம் 19 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு, கேர்ன்ஹில் சமூக மன்றத்தில் (Cairnhill Community Club), முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இது 17 - வது இலக்கியவனம் என்பது குறிப்பிடத்தக்கது. பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலாவதான திருமுருகாற்றுப்படை இந்த நிகழ்வில் அலசப்பட்டது. மொத்த அடிகள் 317 கொண்ட இந்த நூலை நடுவர் உள்ளிட்ட 5 பேச்சாளர்கள் அழகாக விளக்கினர்.
இந்தப் பெருமைமிக்க இலக்கியவன நிகழ்வு இம்முறை சோழன் பேச்சாளர் மன்ற மாதாந்திரக் கூட்டத்தின் ஒரு அங்கமாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நெறியாளராக ஹேமா சுவாமிநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் வரலாற்றையும், சிங்கப்பூரில் தமிழ்மொழிக்காக இவ்வமைப்புத் தொடர்ந்து நடத்தி வரும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்லி முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் அவர்களை அறிமுகம் செய்து அவையை அவரிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இலக்கியவனம் தொடங்கியது.
பெருமதிப்பிற்குரிய முனைவர் சரோஜினி அம்மையார் மிகச் சிறப்பான வகையில் திருமுருகாற்றுப்படை பற்றிய அறிமுகத்தோடு அருமையாக உரையாற்றி இலக்கியவனத்தைத் தொடங்கி வைத்தார். அவர் பேச்சாளர்களை அறிமுகம் செய்து வைக்க பேச்சாளர்கள் மேடைக்கு வந்து திருமுருகாற்றுப்படையின் பெருமைகளையும் அதன் பாடல்களையும் அந்த பாடலில் வரக்கூடிய இலக்கிய சுவைகளையும் மிகவும் திறம்பட எளிமையான முறையில் நகைச்சுவையோடும் நளினத்தோடும் விளக்கினர். 40 - க்கும் மேலாக திரளாக வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் இந்த பேச்சாளர்களின் இலக்கிய மழையில் நனைந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
மதிப்பிற்குரிய பேச்சாளர்கள் குந்தவை, கார்த்திக் சிதம்பரம், உமாசங்கர், அனுராதா, கேத்திரபாலன் ஆகியோர் தங்களின் வார்த்தைகளால் திருமுருகாற்றுப்படை பாடல்களை மலர்களைப் போல எடுத்து அதையெல்லாம் ஒரு மாலையாக தொடுத்து பார்வையாளர்களுக்கு சூட்டினர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இறுதியாக பெருமதிப்பிற்குரிய முனைவர் சரோஜினி அம்மையார் திருமுருகாற்றுப்படையின் பெருமைகளை எடுத்துக் கூறியதோடு அதில் வரும் பாடல்களை இன்னும் பல செய்யுள்களோடு இணைத்து பார்வையாளர்களுக்குப் புரியும் வண்ணமும் பயனுள்ள வகையிலும் பல எடுத்துக்காட்டுகளை கூறி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார்.
ஒரு மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஹரிகிருஷ்ணன் முத்துசாமி அவர்கள் அறிவித்தார். அழகான திருமுருகாற்றுப்படைக்கு பொழிப்புரையை முனைவர் சரோஜினி எழுதுவார்களேயானால் அந்தப் புத்தகத்தை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகமே வெளியிடும் என்னும் நற்செய்தியை அவர் அறிவித்தார்.
நிகழ்ச்சி நெறியாளர் ஹேமா சுவாமிநாதனின் நன்றியுரையோடும், இரவு விருந்தோடும் இலக்கியவனம் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. அடுத்த இலக்கியவனம் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்தனர்.