06/10/2025
என் வாழ்க்கையை அழித்த
என் தாயின் சாபம்
நான் சந்தித்த விசித்திரமான கதைகளில் ஒன்று: ஒரு நாள் ஒரு மனிதர் என்னிடம் வந்து தனது குடும்ப மற்றும் தொழில் வாழ்க்கையில் உள்ள குறைகளைப் பற்றி புலம்பினார். அவர் தனது முதல் திருமணத்திலும், இரண்டாவது திருமணத்திலும் கூட வெற்றி பெறவில்லை என்றும், அவரது குழந்தைகள் அவரை மதிப்பதில்லை, கௌரவிப்பதில்லை என்றும், தான் தொடங்கிய வியாபார முயற்சிகளில் தோல்வியடைந்து, அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டதாகவும் உணர்ந்தார் என்றும் கூறினார். தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று உணர்ந்தார். அவரது தோல்விக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள நான் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டேன், ஆனால் அவர் பதிலளிக்காமல் குறுக்கிட்டு, "நான் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த விரும்புகிறேன். எனது தோல்விக்குக் காரணம், நான் என் தாய்க்கு கீழ்ப்படியாத மகனாக இருந்தேன் என்று நான் நம்புகிறேன். அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமலும், அவரை மதிக்காமலும் இருந்தேன், சில சமயங்களில் அவரை அடித்தும் இருக்கிறேன். மேலும், நான் என் மனைவியை அவருக்கு மேல் வைத்தேன். நான் அவரிடம் செல்லும்போதெல்லாம், அவர் முணுமுணுத்துக்கொண்டு எனக்கு எதிராகச் சாபம் இடுவதை நான் கேட்பேன்," என்று பெருமூச்சுவிட்டுச் சொன்னார்: "இதைத்தான் என் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக நான் நம்புகிறேன்."
நான் அவரிடம், "நீங்கள் சொல்வது சரிதான். ஏனென்றால், பெற்றோரை மதித்து நடக்கத் தவறுவது, இந்த உலகிலேயே தண்டனையை விரைவுபடுத்தும் ஒரு பாவமாகும். அதனால் நீங்கள் அவரிடம் சென்று, மன்னிப்பு கேட்டு, அவருடைய தலையை முத்தமிடுங்கள்" என்று அறிவுறுத்தினேன். அதற்கு அவர் கண்ணீருடன் என்னைப் பார்த்து, "ஆனால் அவர் இறந்துவிட்டார், அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக. என்னை மிகவும் வருத்தப்பட வைக்கும் விஷயம், நான் அவரின் ஜனாஸாவில் கூட பங்கேற்கவில்லை என்பதுதான்" என்றார்..
இந்தக் கதை என்னை மிகவும் பாதித்தது, நான் இதை மறக்க மாட்டேன். தாய்மார்களின் கோபம் மற்றும் தங்கள் குழந்தைகளுக்கு எதிராக அவர்கள் இடும் சாபங்கள் குறித்து பல சூழ்நிலைகளை நான் பார்த்திருக்கிறேன். ஒருநாள் நான் விமானத்தில் இருந்தபோது, ஒரு தாய் தனது நான்கு வயதுக்குட்பட்ட மகளைப் பார்த்து உரத்த குரலில் கத்திக்கொண்டிருந்தார், அவள் மீது கடுமையான சாபங்களை இட்டார். அந்த சாபங்களின் கடுமையால், விமானம் விழுந்துவிடுமோ என்று நான் பயந்தேன். நான் எழுந்து அவரிடம் அமைதியாகப் பேசினேன், அப்போது நம்முடைய தூதர் (ஸல்) அவர்களின் கூற்று எனக்கு நினைவுக்கு வந்தது: "மூன்று பேரின் பிரார்த்தனைகள் எவ்வித சந்தேகமும் இன்றி ஏற்கப்படுகின்றன: அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை, பயணிப்பவரின் பிரார்த்தனை, மற்றும் தந்தை தன் குழந்தைக்காகச் செய்யும் பிரார்த்தனை."
எனவே, இறைத்தூதரின் வழிகாட்டுதல் தெளிவாக உள்ளது: நாம் நம் குழந்தைகளுக்குத் தீங்குக்கு அல்ல, நன்மைக்கே பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(கோபத்தில்) உங்களுக்கு எதிராக நீங்களே சாபம் இடாதீர்கள்; உங்கள் குழந்தைகளுக்கு எதிராகச் சாபம் இடாதீர்கள்; உங்கள் செல்வங்களுக்கு எதிராகவும் சாபம் இடாதீர்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரத்தை நீங்கள் அறியாமல் அதில் நீங்கள் எதிராக பிரார்த்தனை செய்துவிட்டால் அல்லாஹ் உங்களது (தீய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்ளக் கூடும்." எனவே, கோபத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியம், அதைவிட முக்கியம், வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவது. நம் குழந்தைகளுக்கு எதிராகச் சாபம் இட்டு, அது அவர்களின் வாழ்க்கையை அழிப்பதற்கோ, தோல்விக்கோ, அல்லது குறைபாடு ஏற்படுவதற்கோ காரணமாகிவிடக் கூடாது.
பிரபலமான குவைத் கதைகளில் ஒன்று என்னவெனில், ஒரு தாய் தன் மகனின் மீது கோபப்பட்டு, வானத்தை நோக்கி கையை உயர்த்தி, "உன்னை பின்தொடர ஒரு மகனும் பிறக்காமல் போகட்டும்" என்று சபித்தார். அந்த மகனுக்கு ஆறு மகள்கள் பிறந்தனர், ஒரு மகன் கூட பிறக்கவில்லை.
ஆனால் இதற்கு மாற்று என்னவென்றால், நாம் நம் குழந்தைகளுக்குச் சாதகமான முறையில் பிரார்த்தனை செய்ய வேண்டும், உதாரணமாக: "யா அல்லாஹ், என் பிள்ளைகளுக்கு வழிகாட்டு! அவர்கள் மூலம் என் கண்களுக்கு மகிழ்ச்சியைத் தருவாயாக! அவர்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாப்பாயாக! அவர்களை வளர்க்க எனக்கு உதவுவாயாக! யா அல்லாஹ், அவர்களை மேன்மையடையச் செய்! அவர்களின் நிலையை உயர்த்து! அவர்களின் குணங்களை அழகுபடுத்து! அவர்களுக்கு நல்ல துணையை அளி! அல்குர்ஆனை மனப்பாடம் செய்யவை! கெட்ட நண்பர்களிடமிருந்து அவர்களை விலக்கி வை! அவர்கள் எங்களுக்குக் கீழ்ப்படியும் நல்ல மகனாக இருக்கச்செய்! அவர்கள் மீது நீ திருப்தி அடைவாயாக! யா அல்லாஹ், அவர்களின் உள்ளங்களை விரிவாக்கு! அவர்களின் காரியங்களை எளிதாக்கு! அவர்களை வழிகாட்டிகளாகவும், வழிகாட்டப்பட்டவர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் ஆக்கு! பிசாசுகளின் குழப்பங்களிலிருந்தும், சதி செய்பவர்களின் தீங்கிலிருந்தும் நான் அவர்களுக்கு உன்னிடம் அடைக்கலம் தேடுகிறேன். யா அல்லாஹ், என் பிள்ளைகளை முஃமின்களாகவும், நல்லவர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும், வணங்குபவர்களாகவும், உன் மார்க்கத்தை ஆதரிப்பவர்களாகவும் ஆக்கு! யா அல்லாஹ், அவர்களை உன் நல்ல அடியார்களாகவும், உன் புத்தகத்தை மனப்பாடம் செய்தவர்களாகவும், தீன், வழிபாடு மற்றும் குணங்களில் சிறந்தவர்களாகவும், வாழ்க்கையில் மகிழ்ச்சியானவர்களாகவும், வளமானவர்களாகவும் ஆக்கு! யா அல்லாஹ், உன் ஹலாலானவற்றுடன் அவர்களை ஹராமானவற்றிலிருந்து விலக்கி, உன் அருளால் உன்னைத் தவிர மற்றவர்களிடமிருந்து அவர்களைத் தேவையற்றவர்களாக ஆக்கு!"
பிரார்த்தனையைப் பற்றி நான் கேள்விப்பட்ட அழகான விஷயம் என்னவெனில், ஒரு தாய் தன் பிள்ளைகளுக்காக, "யா அல்லாஹ், என் பிள்ளைகளுக்கு யூசுஃப் நபியின் அழகையும், லுக்மான் நபியின் ஞானத்தையும், அய்யூப் நபியின் பொறுமையையும், முஹம்மது (ஸல்) அவர்களின் நற்குணத்தையும் கொடுப்பாயாக" என்று பிரார்த்தனை செய்தார்.
இமாம் இப்னு கஸீரின் அழகான ஒரு கூற்றை நான் ஒருநாள் படித்தேன், அதன் சுருக்கம்: அல்லாஹ் தனது அடியார்களிடம் உள்ள பொறுமை மற்றும் கருணையைப் பற்றி அறிவிக்கிறான். மக்கள் கோபத்திலோ, வெறுப்பிலோ இருக்கும்போது தங்களுக்கு, தங்கள் செல்வங்களுக்கு, அல்லது தங்கள் குழந்தைகளுக்கு எதிராகச் சாபம் இட்டால், அவர்கள் தங்கள் அழிவை நாடவில்லை என்பதால், அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, அவர்கள் திருப்தியாக இருக்கும்போது பிரார்த்தனை செய்தால் மட்டுமே அல்லாஹ் பதிலளிக்கிறான். இது அல்லாஹ்வின் கருணை மற்றும் அருளில் ஒன்றாகும். இதுவே "மனிதர்கள் நன்மையை விரைவுபடுத்திக் கோருவது போல, அல்லாஹ் அவர்களுக்கு தீமையை விரைவுபடுத்தினால், அவர்களின் கால அவஸ்தை (மரணம்) வந்தே தீரும். ஆனால் எங்கள் சந்திப்பை நம்பாதவர்களை, அவர்களின் குரோதத்தில் தடுமாறித் திரிந்து கொண்டே விட்டு விடுகிறோம்" (யூனுஸ்: 11) என்ற இறைவசனத்தின் விளக்கமாகும். ஆகவே, பிரார்த்தனை செய்யும் போது உள்ள நோக்கம் அந்தப் பிரார்த்தனை ஏற்கப்படுவதில் அல்லது நிராகரிக்கப்படுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில், ஓர் அருமையான நண்பரின் அழகான கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. அவருடைய வசதிகள் குறைவாக இருந்தன; திறமைகள் பலவீனமாக இருந்தன; கல்வி சாதாரணமானது; ஆனால் அவர் எல்லா வேலைகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டார்; வெற்றியும் பெற்றார். அவருடைய வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் அவருடைய வெற்றியின் ரகசியம் என்ன என்று நான் அவரிடம் கேட்டேன். அவர், "என் தாயின் பிரார்த்தனைதான் காரணம். நான் அவரிடம் சென்று அவர் தலையை முத்தமிடும் போதெல்லாம், அவர் எனக்காகப் பிரார்த்தனை செய்து, '(யா அல்லாஹ்) அவருடைய தலையை உயர்த்தப்பட்டதாக ஆக்குவாயாக' என்று கூறுவார். நான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் அந்தப் பிரார்த்தனையின் அருளை அனுபவித்து வருகிறேன்" என்றார். உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஒரு தொழிலதிபர் ஒருமுறை என்னிடம், "எனது செல்வத்தின் ரகசியம் (நான் என் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்ததும், அவர்களின் திருப்தியும், அவர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்ததும்) தான்" என்று கூறினார்.
உங்கள் தாய்தந்தையரைப் பேணிப் பாதுகாருங்கள்! உங்கள் பிள்ளைகளும் உங்களைப் பேணிப் பாதுகாப்பார்கள்.
(அரபு மூலம்: கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ. தமிழ் வடிவம்: கலாநிதி ஏ. பீ. எம். அப்பாஸ்)