18/08/2026
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அன்பிற்கினிய சம்மாந்துறை வாழ் சகோதர, சகோதரிகளே!
🩸 உதிரம் கொடுப்போம்… உயிர் காப்போம்! 🩸
சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் — SSWF — ஏற்பாடு செய்யும் இரண்டாம் கட்ட இலவச இரத்ததான முகாம், இன்ஷா அல்லாஹ், 2026 ஆகஸ்ட் 29ஆம் திகதி சனிக்கிழமை, காலை 8.00 மணி முதல் லுஹர் தொழுகை வரை, சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
இவ்விரத்ததான முகாம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் முழுமையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது.
மேலும், சம்மாந்துறையின் நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா, மஜ்லிஸுஷ் ஷூரா, பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஆகியவற்றின் அனுமதி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடனும், சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினரால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முச்சபைகளுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், எமது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் பொதுநல வேலைத்திட்டங்களை முச்சபைகள், சமூக அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாகவும் இவ்விரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்பான சகோதர, சகோதரிகளே!
நாம் வழங்குகின்ற ஒரு யூனிட் இரத்தம், நாளை ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்குக் காரணமாக அமையலாம்.
விபத்துக்களில் காயமடைந்தவர்கள், அவசர சிகிச்சை பெறுபவர்கள், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்கள், இரத்தம் தேவைப்படும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலருக்கு, நாம் வழங்குகின்ற இரத்தம் உயிர்காக்கும் உதவியாக அமைந்துவிடலாம்.
அல்லாஹ் தஆலா திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
“யார் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் மனிதர்கள் அனைவரையும் காப்பாற்றியவர் போன்றவராவார்.”
— ஸூரத்துல் மாயிதா, 5:32
எனவே, தகுதியுடைய அனைவரும் இந்த மனிதநேயப் பணியில் முன்வந்து இரத்ததானம் செய்து, ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்குக் காரணமாக அமையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இரத்ததானம் செய்ய விரும்பும் ஆண், பெண் இருபாலரும், இந்த அறிவிப்புடன் திரையில் காண்பிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் தேவையான விபரங்களைப் பூர்த்தி செய்து முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம்.
அல்லது,
2026 ஆகஸ்ட் 29ஆம் திகதி சனிக்கிழமை, காலை 8.00 மணி முதல் லுஹர் தொழுகை வரை, சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நேரடியாக வருகை தந்து இரத்ததானம் செய்யலாம்.
நீங்கள் வழங்கும் இரத்தம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டு, தேவையுடைய நோயாளர்களின் உயிர்காக்கும் மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.
🩸 உதிரம் கொடுப்போம்…
உயிர் காப்போம்…
மனிதநேயத்தால் ஒன்றிணைவோம்! 🩸
அல்லாஹ் எமது இந்த நற்பணியை ஏற்றுக்கொண்டு, இதில் பங்குகொள்ளும் இரத்ததானிகள், வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள், முச்சபையினர், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், சமூக அமைப்புகள் மற்றும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் பணிப்பாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் நிறைவான நற்கூலியை வழங்குவானாக.
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
ஏற்பாடு:
சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் (SSWF)
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு