14/06/2024
சர்வதேசக் குருதிக் கொடையாளர்கள் தினம் 2024
உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் திகதியை, உலக இரத்த வழங்குனர் நாளாக கொண்டாடி வருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.
உலகளாவிய ரீதியில் எத்தனை வகையான தானங்கள் காணப்பட்டாலும் உயிர்காக்கும் தானமாக இரத்ததானத்தினை குறிப்பிட்டால் மிகையாகாது. பிறருக்கு கொடுப்பதிலே அதியுயர் உயிர் காக்கும் சொத்தாக இரத்ததானம் விளங்குகிறது.
இரத்ததானம் என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்கு பொது மனப்பான்மையுடன் தானமாக வழங்குவதாகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லீட்டர் வரையான இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 400 – 450 மில்லி லீற்றர் இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகி விடும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்ததானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5 -10 நிமிடங்கள் போதும்.
உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி.
எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் உயரிய செயல் இவ் இரத்த தானமாகும். ஓவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. நாளாந்தம் 38000 க்கு மேல் இரத்த கொடையாளிகளின் பங்களிப்பு தேவையாகவுள்ளது. அனைவராலும் பொதுவாக விரும்பப்படும் பிரிவாக “O” பிரிவு காணப்படுகிறது.
குருதியில் A, B, AB, O ஆகிய நான்கு பிரதான வகை குருதிகள் உள்ளதுடன், இவற்றுள் பொசிட்டிவ் நெகட்டிவ் என ஒவ்வொன்றிலும் வகையாகப் பிரிந்து மொத்தமாக எட்டு வகையான குருதிகள் உள்ளன. இதில் O குருதி உள்ளவர் நால்வகை குருதி உள்ளவர்களுக்கும் குருதியை வழங்கக்கூடியதாக இருக்கும். இதனால் O பொது வழங்கி எனவும். AB குருதி உள்ளவர் நான்கு வகைக் குருதி உள்ளவரிடமிருந்தும் குருதியைப் பெறக்கூடியதாக உள்ளதனால் பொதுவாங்கி எனவும் அழைக்கப்படும்.
குருதியை 35 நாட்களுக்கு சேமிக்கமுடியும். குருதி திரவவிழையத்தை தனியே பிரித்தெடுத்து உறை நிலையில் ஒருவருடத்திற்கு மேல் சேமிப்பாக வைத்திருக்க முடியும். குருதி சேமிக்கும் போது சோடியம் சித்திரேற்று வகைகள் குருதிச் சேமிப்புப் பையினுள் குருதி உறையாமல் தடுப்பதற்கு இடப்படுகின்றன.
இலங்கை உட்பட தெற்காசிய பிராந்திய நாடுகள் ஜுன் 14 ஆம் திகதி இரத்த தானத்திற்கான நாளாக பிரகடனப்படுத்தியுள்ளன. இலங்கையில் இரத்தமேற்றும் முறை 1950 களில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு 1968 ஆம் ஆண்டு முதற் தடவையாக இரத்ததானம் பெறும் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரத்த தானம் மிக அவசியமாக இருப்பதனால் இரத்த தானம் செய்வதற்கு மக்கள் முன்வருவது அவசியம்.
அனைத்து வகையான விரும்பிய பொருட்களையும் வாங்க கடையுண்டு குருதி வாங்க எங்கே கடையுண்டு? உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் உயிர்களுக்காகவும் தன்னலம் கருதாது தங்கள் உதிரத்தைத் தானம் செய்து பல உயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் இந்த உன்னதமானவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.
இரத்த தானம் செய்வது எவ்வளவு நன்மையானது இலகுவானது என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். அனைவரது தோலில், நிறத்தில், மதத்தில் சாதியில் பண்பாட்டில் வேறுபாடு இருந்தாலும் அனைவரின் உடம்பெங்கும் பரந்து ஓடும் குருதியின் ஒரே நிறம் சிவப்புத்தான். என்ன தான் நவீன உலகில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் ஆயிரம்தான் விஞ்ஞான விந்தைகள் நம் கண்ணெதிரே விரிந்திட்ட போதும் குருதியில்லாமல் எவரும் உயிர் வாழவும் முடியாது அதே நேரம் குருதிக்கு மாற்றீடாக வேறு எதனையும் பயன்படுத்தவும் முடியாது. குருதிக்கு மாற்றீடு குருதி மட்டுமே.
எனவே உதிரம் கொடுத்து உயிர் காக்கும் உயரிய சேவையாற்றும் இரத்த நண்கொடையாளர்களுக்கு எமது நனிற்களும் பாராட்டுக்களும்......
அட்மின்