11/06/2026
சான்றோரைப் போற்றுவதும், கற்றோரை கெளரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு!
இந்தப் பண்புக்கமைய பேராசிரியர் அழகையா துரைராசா அவர்களை போற்றுவதும், இளம் தலைமுறையினருக்கு சிறந்த முன் உதாரணமானவராக அறிமுகம் செய்வதும் எமது தலையாய கடமையாகும்.
பேராசிரியர் துரைராசா அவர்கள் ஒரு தலை சிறந்த கல்விமான், உலகப்புகழ் ஈட்டிய அறிஞர், ஆறு ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அவர் எம் மண்ணிற்கு ஆற்றிய சேவை மகத்தானது.
இவர் ஒரு தேசப்பற்றாளர். மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார். இவரது வாழ்க்கை இந்த மண்ணோடு பிணைந்தது. இந்த மண்ணினதும் மக்களதும் போராட்ட வாழ்வின் பளுக்களை சுமந்துகொண்டார்.
எத்தனையோ அவலங்கள், துன்பங்கள் மத்தியிலும், எதற்கும் அஞ்சாத துணிவுடன் இந்த மண்ணைப்பற்றி நின்ற மக்களுக்கு பேராசிரியர் துரைராசா அவர்கள் ஒரு ஊக்க சக்தியாக விளங்கினார். தளர்ந்து போகாத உறுதிப்பாட்டிற்கும் ஒரு உன்னத உதாரணமானவராக விளங்கினார்.
தன்னலமும், தற்பெருமையும் அகன்று நற்பண்பாக எளிமை தோன்றுகின்றது, இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக, பண்பான மனிதராக ஆக்கிவிடுகின்றது. இந்த வகையில் பேராசிரியர் துரைராசா அவர்கள் ஒரு அழகான மனிதர். அவரிடமுள்ள இந்த அகத்தின் அழகுதான் மக்களை கவரும் மாண்பாக விளங்குகின்றது.
இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியானவர்களை அறிமுகம் செய்ய வேண்டியது அனைவரினதும் பொறுப்பு மிக்க கடமையாகும்.
பேராசிரியர் அவர்களின் நினைவு தினத்தில் நினைவு கூர்வதுடன், அவர்தம் சிறப்பினை முன்னுதாரணமாகக் கொண்டு பயணிக்கும் தலைமுறையினை உருவாக்க செயற்படுவோம்.
அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர்
தன்னை மொண்டு நெறிதரும் மக்கள்
எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி
புதிய தோர் உலகம் செய்வோம்!
சிறகுகள் அமையம்
2026.06.11