25/01/2025
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் அமைப்பின் கிளை கண்டி - கலகெதர கிராமத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
----------------------------
இஸ்லாத்தின் மிக உயர்ந்த மரபுகளுக்குத் தகுதியான மற்றும் நவீன வாழ்க்கை முறையின் ஒவ்வொரு பிரிவிலும் தாய் நாட்டிற்கு தங்களால் ஆன பெறுமதியான சேவைகளையும் உயர்ந்த செயல்களையும் ஆற்றக்கூடிய இளைஞர்களைக் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கும் நோக்கில் 1912 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு 1968 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க பாராளுமன்ற கட்டளைச்சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் அமைப்பின் (YMMA) புதிய கிளையானது 2024.10.19 ஆம் திகதி கண்டி - கலகெதர கிராமத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கிராமத்தின் வளம் மிகு இளைஞர் அணிகளை ஒன்று திரட்டி கலகெதர பிரதேசத்தின் ஆன்மீக, கல்வி, கலாச்சார மற்றும் பண்பாடுரீதியான அபிருத்தியையும் சமூக சேவை மற்றும் பொது நலனை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகள் மூலம் இன ஐக்கியம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட YMMA கிளையின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு மற்றும் பொதுக்கூட்டத்தின் பிரதம அதிதியாக YMMA அமைப்பின் கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கான கௌரவ பணிப்பாளர் ஜனாப் Ihthisam M. Husaindeen அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் கலகெதர ஜாமிஉல் அன்வர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் விதமாக கலகெதர YMMA கிளையின் அழைப்பை ஏற்று அதன் உப தலைவர் ஜனாப் ஹில்மி மற்றும் செயலாளர் ஜனாப் இயாஸ் ஆகியோர் பங்குபற்றியதுடன் YMMA அமைப்பு குறித்த அறிமுகத்தை கலகெதர கிராமத்திற்கு பல காலங்களுக்கு முன் வழங்கிய முன்னோடிகள் சார்பில் அல் ஹாஜ் அன்வர் மற்றும் ஜனாப் மஸாஹிப் ஆகியோரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலகெதர Edumax கல்வி நிறுவன கேட்போர்கூடத்தில் மாலை 7.30 மணி அளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கலகெதர YMMA கிளையின் அங்கத்தவரான ஜனாப் றிஸ்மி ஆப்தீன் அவர்களால் குறித்த நிகழ்வின் நோக்கத்தை தெளிவுபடுத்தும் விதமாகவும் நிகழ்வின் பிரதம அதிதிகளை வரவேற்கும் விதமாகவும் உரை ஆற்றப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து நிகழ்வின் பிரதம அதிதியான கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கான கௌரவ பணிப்பாளர் ஜனாப் Ihthisam M. Husaindeen அவர்களால் விஷேட உரை ஆற்றப்பட்டது.
மேற்படி உரையில் பணிப்பாளர் அவர்கள் இலங்கை வரலாற்றில் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் அமைப்பு மற்றும் இலங்கை முஸ்லிம் வாலிபர் சம்மேளனம் ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி பற்றியும் இலங்கை சூழலில் கல்வி, சமூக,பொருளாதார மற்றும் பன்பாட்டு வளரச்சியில் அதன் பங்களிப்பு குறித்தும் அழகான முறையில் விடயங்களை தெளிவுபடுத்தியதுடன் YMMA தேசிய அமைப்பின் நிருவாகக் கட்டமைப்பு, மாவட்ட மற்றும் பிராந்தியக் கிளைகளின் கட்டமைப்பு, அவற்றின் கடமைகள் மற்றும் திட்ட அமுலாக்கங்கள் குறித்தும் விடயங்களை தெளிவூட்டியதுடன் சமூக செயற்பாடுகளில் இளைஞர்களது பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் அவரது அவதானங்களை அழகான முறையில் முன்வைத்தமை குறப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில் அங்கத்தவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டைகள் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அவை நிகழ்வின் பிரதம அதிதி மற்றும் ஏனைய அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து YMMA அமைப்பின் கலகெதர கிளையின் எதிர் வரும் இரண்டு வருடங்களுக்கான நிர்வாக அங்கத்தவர் தெரிவானது YMMA அமைப்பின் கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கான கௌரவ பணிப்பாளர் ஜனாப் Ihthisam M. Husaindeen அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக நடைபெற்றதுடன் இதனடிப்டையில் நிர்வாக உறுப்பினர்கள் YMMA கிளையின் அங்கத்தவர்களால் முன்மொழியப்பட்டு ஆமோதிக்கப்பட்டனர்.
இதற்கமைவாக பின்வரும் அங்கத்தவர்கள் கலகெதர YMMA கிளையின் நிறுவாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்
• தலைவர் : எம்.பீ நளீம் ஷிஹாம் – ஓய்வு பெற்ற வான்படை அதிகாரி, குவாஸி நீதிபதி
• உப தலைவர் : எச்.எம் ஹுஸைன் – தலைவர் CAIS சமூக சேவை நிறுவனம்,வியாபாரி
• செயலாளர் : எம்.ஏ.எம் அன்ஷாப் – ஆசிரியர் (இஸ்லாம், தகவல்தொழில்நுட்பம்)
• பொருளாளர் : எம். ஏ.எம் ஷபீர் – கலகெதர ஸக்காத் நிதிய உறுப்பினர், வியாபாரி
• உப செயலாளர் : எம்.என்.எம் அதீக் – பணிப்பாளர் Edumax கல்வி நிறுவனம், பொறியியலாளர்
• உப பொருளாளர் : எம்.யூ றுஸைக் மொஹமட் – வியாபாரி
• ஊடக ஒருங்கிணைப்பாளர் : றிஸ்மி ஆப்தீன் - அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையின் தரம் 1 உத்தியோகத்தர்
நிறுவாக உறுப்பினர்களின் தெரிவையடுத்து அதிதிகள் சார்பில் தமது கருத்துகளை முன்வைத்த ஜனாப் மஸாஹிப் அவர்கள் கலகெதர YMMA கிளையின் செயற்பாடுகளை ஊரை மையமாகவைத்து தேசிய YMMA அமைப்பின் நோக்கங்களை பூரத்தி செய்யும் விதமாக சிறப்பாக திட்டமிட்டுக்கொள்வதன் மூலம் ஒரு வெற்றிகரமான நீண்ட பயணத்தை இந்த அணியினால் முன்னெடுக்க முடியும் என்ற விடயத்தை சுட்டிக்காட்டியதுடன் நிகழ்வின் நன்றி உரையானது கலகெதர YMMA கிளையின் தலைவர் ஜனாப் எம்.பீ நளீம் ஷிஹாம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.