20/06/2026
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையின் அராஜக தாக்குதல்: இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்!
மத்திய கல்வி அமைச்சகத்தின் அலட்சியத்தால் வஞ்சிக்கப்படும் மாணவர் சமூகத்திற்கு ஆதரவாகவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் இன்று (20/06/2026) ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் அனைத்து தோழர்களும் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என காவல்துறையுடனான புரிந்துணர்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், எமது அமைப்பின் தோழர்கள் பயணித்த பேருந்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் வந்தபோது, காவல்துறையினர் மிக அராஜகமான முறையில் பேருந்தை அடித்து நிறுத்தினர். பேருந்தை விட்டு வெளியே இறங்கி தோழர்களை, காவல்துறை அராஜகமான முறையில் கைது செய்ய முற்பட்டது.
காவல்துறையினர் நடத்திய இந்த கொடூர தாக்குதலில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தோழரின் தோள்பட்டை இறங்கியுள்ளது. அதைவிட அநாகரிகமாக, எமது அமைப்பின் பெண் தோழர்களை ஆண் காவலர்கள் தகாத முறையில் கையாண்டு, அவர்களின் ஆடையைப் பிடித்து இழுத்து கைது செய்துள்ளனர். மேலும், சட்டத்திற்குப் புறம்பாக காவலர்கள் தங்களது சீருடையில் பெயர் வில்லைகளை (Badges) அணியாமல் தங்களின் அடையாளத்தை மறைத்து கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டனர்.
நாளை மறுநாள் நீட் மறுதேர்வு நடக்கவிருக்கும் சூழலில், இன்னும் பல மாணவர்களுக்கு அனுமதிச்சீட்டு (Admit Card) கிடைக்காத அவல நிலை நீடித்து வருகிறது. மகாராஷ்டிராவில் வசிக்கும் ஒரு மாணவருக்கு, தேர்வு எழுதும் மையம் அபுதாபியில் ஒதுக்கப்பட்டிருக்கும் கொடுமையும் அரங்கேறியுள்ளது. இந்த தேர்வு குளறுபடிகளாலும், மத்திய அரசின் அலட்சியத்தாலும் ஏற்பட்ட மன உளைச்சலால் ஏற்கனவே இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் நீதித்திற்காகவும் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது, மிக மோசமான முறையில் வன்முறையை ஏவி தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் இந்த அடாவடித்தனமான போக்கை இந்திய மாணவர் சங்கம் (SFI) வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவர் உரிமைகளுக்கான எமது போராட்டம் இத்தகைய அடக்குமுறைகளால் ஒருபோதும் ஒடுங்கிவிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநிலத் தலைவர்
சி. மிருதுளா
மாநிலச் செயலாளர்
தௌ. சம்சீர் அகமது