23/05/2026
குற்றாலம் வனச்சரகத்திற்குட்பட்ட வல்லம் பகுதியில் விவசாய நிலம் அருகே காயமடைந்த நிலையில் நின்றுகொண்டிருந்த யானைக் குட்டி, வனத்துறையினரின் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பின் மூலம் மீண்டும் தாய் யானையுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
வல்லம் பகுதியில் காயமடைந்த நிலையில் யானைக் குட்டி இருப்பது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, குட்டியின் தாய் யானை காப்புக்காடு எல்லை அருகே சுற்றித்திரிவது கண்டறியப்பட்டதால், மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
கால்நடை மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், யானைக் குட்டியின் வயிற்றுப் பகுதி, துதிக்கை, ஆண் இனப்பெருக்க உறுப்பு மற்றும் பின்காலில் காயங்கள் மற்றும் கடுமையான தொற்று இருப்பதும், பின்காலில் வீக்கம் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.
காயங்களுக்கு மருந்து, வீக்கத்தைக் குறைக்கும் சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், யானைக் குட்டி மற்றும் தாய் யானையின் நடமாட்டங்களை வனத்துறை களப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
கண்காணிப்பின் போது தாய் யானை குட்டி இருந்த பகுதிக்கு அருகில் வந்தபோதிலும் உடனடியாக இணைப்பு ஏற்படவில்லை. பின்காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக குட்டியால் மலைப்பகுதியில் இயல்பாக நகர முடியாத நிலை இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, யானைக் குட்டியை தாய் யானையுடன் பாதுகாப்பாக இணைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், வனத்துறை பணியாளர்கள் பாதுகாப்பான தூரத்தில் இருந்து தொடர்ந்து கண்காணித்தனர்.
நேற்று இரவு தாய் யானை மற்றும் அதனுடன் வந்த மேலும் இரண்டு யானைகள், யானைக் குட்டியை அணுகி அதை மீண்டும் கூட்டத்துடன் அழைத்துச் சென்றன. யானைகளின் குரல் ஒலிகள், காலடித்தடங்கள் மற்றும் கள ஆய்வின் மூலம் இந்த இணைப்பு உறுதி செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இன்றும் களப்பணியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், யானைக் கூட்டம் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ட்ரோன் உதவியுடன் யானைக் கூட்டத்தின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு, சிகிச்சை மற்றும் மீண்டும் இணைப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கிய கிராம மக்கள், விவசாய நில உரிமையாளர், கால்நடை மருத்துவர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு தென்காசி மாவட்ட வன அலுவலர் நன்றி தெரிவித்தார்.