23/10/2025
'பேஸ்புக்'-இல் பதிவிட்டு எவ்வளவு காசு💰 பார்க்கலாம்? என்று கேட்டால்; ஒவ்வொரு மாதமும் - ஆயிரங்களில், லட்சங்களில் உழைக்கலாம். சிலவேளை அதற்கும் மேலாக பார்ப்பவர்களும் இருக்கலாம்.
'பேஸ்புக்'-இல் பதிவிடுகின்றவர்களுக்கு அந்த நிறுவனம் காசு💸 கொடுக்கிறது.
எல்லோருக்கும் இந்த வாய்ப்பு இருக்கிறதா என்றால், இல்லை. 'நீங்கள் காசு உழைக்கும் தகுதியைப் பெற்றிருக்கிறீர்கள்' என்று 'பேஸ்புக்'-கே உங்களுக்குத் தெரிவிக்கும். அவ்வாறானவர்களுக்கே இந்த வாய்ப்பு உள்ளது.
'பேஸ்புக்'-இல் காசு உழைப்பதற்கும், அதற்கான தகுதியைப் பெறுவதற்கும் - நாம் இடுகின்ற பதிவுகள்தான் அடிப்படையாக இருக்கின்றன.
எனவே, பதிவுகள் அனைத்தும் நமது சொந்தச் சரக்காக இருக்க வேண்டும். படங்களை (Photos)📷 கொண்ட பதிவுகளுக்கே, அதிகம் காசு கிடைக்கிறது. எனவே, நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு படமொன்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பதிவுகளை அதிகம் பேர் பார்க்க வேண்டுமென்றால், அவை எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை யோசியுங்கள்.
மனிதன்👨🦱 அடிப்படையில் விடுப்புப் பார்ப்பதிலும் கதை கேட்பதிலும் ஆர்வம் உள்ளவன். எனவே, வாசகர்கள் அறிந்திராத/அறிய விரும்பும் விடயங்களை, ஒரு கதை போல எழுதுங்கள்.
திரைக்கும் பின்னால் நடப்பவற்றைத் தெரிந்து கொள்வதற்கு, மனித மனம் எப்போதும் விரும்பும். எனவே, அவ்வாறான நிகழ்வுகளை பதிவிடுங்கள்.
பொதுவாக, தாம் இழந்தவற்றின் மீது எல்லோருக்கும் ஓர் ஏக்கம் இருக்கும். எனவே, அவை குறித்து எழுதுங்கள்.
மறுபுறம், மனிதர்கள் உணர்வுபூர்வமானவர்கள்💓 - கருணைமிக்கவர்கள். எனவே, 'நெஞ்சைத் தொடும்' கதைகளை வாசகருக்குக் கொடுங்கள்.
தைரியமிருந்தால், அவ்வப்போது ஊறுகாய் போல, சர்ச்சைக்குரிய விடயங்களையும் உங்கள் பதிவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேலும், உங்கள் பதிவில் தேவையான இடங்களில் உணர்வுகளை வெளிப்படுத்தும் emoji🥰களை இட்டுக் கொள்ளுங்கள்.
பதிவின் முடிவில், பொருத்தமான மற்றும் Trendingஆன ஹேஷ்டேக் (Hashtag) வார்த்தைகளைப் போடுங்கள்
இவை அனைத்தும் 'பேஸ்புக்' சொல்லும் ஒழுக்க விதிகளுக்குள் அமைய வேண்டும்.
காசு வருகிறது என்பதற்காக, சிலர் எந்த 'மட்டத்துக்கும்' இறங்கி பதிவுகளை இடுகின்றனர். நமக்கான தரத்தை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு விவசாய பூமி போல, டிஜிட்டல் நிலமொன்றை நமக்கு 'பேஸ்புக்' கொடுத்திருக்கிறது.
எதை விதைப்பது? எப்படி விதைப்பது? என்பதைப் பொறுத்தே, நமக்கான அறுவடை கிடைக்கும்.